என்னாது.. அடுத்த வாரமே கர்நாடகாவில் பாஜக ஆட்சியா??.. குண்டைப் போடும் எம்எல்ஏ
பெல்காம்: கர்நாடகாவில் அடுத்த வாரத்திற்குள் பாஜக ஆட்சி அமையும் என்று அக்கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான உமேஷ் கத்தி தெரிவித்துள்ளதால் அங்கு அரசியல், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. முதல்வராக மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த குமாரசாமி பதவி வகித்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன்பாக கர்நாடக அமைச்சரவையை முதல்வர் குமாரசாமி விரிவாக்கம் செய்தார்.

அமைச்சரவை விரிவாக்கம்
அப்போது அமைச்சர் பதவியில் இருந்து கழற்றிவிடப்பட்டவர்களும், அமைச்சர் பதவி கிடைக்காதவர்களும் அதிருப்தி அடைந்ததாக கூறப்பட்டது. அதில் முக்கியமானவர் மூத்த எம்எல்ஏவான ரமேஷ் ஜார்க்கிகோலி. அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட இவர், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யப் போவதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

பிற கட்சியினர்
இந்த நிலையில், பெல்காமில், நிருபர்களிடம் பேசிய உமேஷ் கத்தி, "காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா கட்சியைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்கள் என்னுடன் தொடர்பில் உள்ளனர். ஆனால் அவர்களது பெயர்களை தற்போது வெளியிட முடியாது. காலம் வரும்போது சொல்கிறேன். பாஜக முயற்சி செய்து கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தவில்லை. காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா கட்சியில், அதிருப்தியடைந்து, கவலையுடன் வருபவர்களை மட்டுமே நாங்கள் வரவேற்கிறோம். அவர்கள் எங்களுடன் இணைந்து விட்டால் அதற்குப் பிறகு ஒரு வாரத்தில் பாரதிய ஜனதா கட்சி கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும்.

காங்கிரஸ் தலைவர் கண்டனம்
எப்படி ஆட்சி அமையும் என்பதை எல்லாம் இப்போது கேட்காதீர்கள். ஆட்சி அமையும் போது உங்களுக்கே தெரியும் இவ்வாறு உமேஷ் கத்தி தெரிவித்தார். இதனிடையே கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் தினேஷ் குண்டுராவ் நிருபர்களிடம் கூறுகையில், இது போன்ற கற்பனை கதைகளை அவிழ்த்து விட்டு மக்களை குழப்ப கூடாது. அவர் கூறியதை போல நடக்காவிட்டால் தனது எம்எல்ஏ பதவியை உமேஷ் கத்தி, ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.

பாஜகவிற்கு தேவை 9 எம்எல்ஏக்கள்
இதற்கு பதிலடி கொடுத்துள்ள உமேஷ் கத்தி, ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா கட்சியைச் சேர்ந்த 8 முதல் 10 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளனர் என்று கூறியுள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் 104 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது. ஆனால் ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் தேவை என்ற நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடித்தன என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications