1977ம் ஆண்டு முதல் பாஜக கடந்து வந்த 'ரோலர்- கோஸ்டர்' பாதை!
டெல்லி: பாரதிய ஜனதாவின் தேர்தல் அரசியல் 1984ம் ஆண்டுதான் தொடங்கியது. அதற்கு முன்னர் 1977ம் ஆண்டு இந்திராகாந்தி அவசர நிலையை பிறப்பிக்க அதை எதிர்த்து ஜனசங்கம் தீவிரப் போராட்டத்தை நடத்தியது.
பின்னர் 1977ம் ஆண்டு பொதுத் தேர்தலை தேர்தல் ஜனசங்கமானது பல கட்சிகளுடன் இணைந்து ஜனதா கட்சியாக உருவாகி தேர்தலை எதிர்கொண்டு பெரும் வெற்றி பெற்றது. ஜனசங்கத்தின் தலைவராக இருந்த வாஜ்பாய் அந்த அரசில் வெளியுறவுத் துறை அமைச்சரானார். ஆனால் அந்த அரசு நீடிக்கவில்லை. 1980ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி உருவாக்கப்பட்டது.

1984-ல் 2 தொகுதிகள்
1984ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக போட்டியிட்ட இடங்கள் 224. வென்ற தொகுதிகள் 2. ஆந்திராவில் 1, குஜராத்தில் 1. வாங்கிய மொத்த வாக்குகள் 7.74%.

1989-ல் 85 தொகுதிகள்
அதன் பின்னர் 9வது லோக்சபாவுக்கான தேர்தல் 1989ம் ஆண்டு நடைபெற்றது. பாஜக 225 இடங்களில் போட்டியிட்டு 85 தொகுதிகளைக் கைப்பற்றியது. வாக்கு சதவீதம் 11.36% ஆக அதிகரித்தது. அப்போதுதான் வி.பி.சிங் ஆட்சி அமைக்க பாஜக ஆதரவு தந்தது. மண்டல் கமிஷன் மற்றும் ராமர் கோயில் விவகாரத்தில் ஆதரவை விலக்கிக் கொண்டது.

1991-ல் 120 இடங்கள்
1991ம் ஆண்டு நடைபெற்ற 10-வது லோக்சபா தேர்தலில் பாஜக மொத்தம் 468 இடங்களில் போட்டியிட்டது. முந்தைய தேர்தலைவிட இன்னும் சற்று கூடுதலாக 120 இடங்களை வென்றது. அதன் வாக்கு சதவீதமும் 20.11% ஆக அதிகரித்தது.

1996-ல் 161 இடங்கள்
11வது லோக்சபா தேர்தல் 1996ம் ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக மொத்தம் 471 தொகுதிகளில் போட்டியிட்டது. 161 இடங்களில் வென்றது. அதன் வாக்கு சதவீதம் 20.29% ஆக இருந்தது.

1998ல் ஏறுமுகம்
1998ம் ஆண்டு 12வது லோக்சபா தேர்தலில் அக்கட்சி போட்டியிட்ட இடங்கள் 388. வென்ற இடங்கள் 182. இதுதான் அதிகபட்சமாக பாஜக வென்ற தொகுதிகள். அதன் மொத்த வாக்கு சதவீதம் 25.59%. அப்போதுதான் மத்தியில் வாஜ்பாய் தலைமையில் பாஜக ஆட்சியும் அமைத்தது. அந்த ஆட்சிக்கான ஆதரவை அதிமுக விலக்கிக் கொள்ள மீண்டும் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.

1999ல் அதே நிலை.. வாக்கு சதவீதம் சரிவு
1999ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் பாஜக போட்டியிட்ட இடங்கள் 339. வென்ற இடங்கள் 182. அதன் வாக்கு சதவீதம் 23.75% ஆக சரிந்தது. ஆனால், மீண்டும் வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைந்தது.

2004 முதல் இறங்குமுகம்
2004ம் ஆண்டு தேர்தலில் இந்தியா ஒளிர்கிறது கோஷத்துடன் மொத்தம் 364 இடங்களில் போட்டியிட்டது. இப்போது போலவே பாஜகதான் ஆட்சி அமைக்கும் என்று ஊடகங்கள் அனைத்தும் கருத்துத் தெரிவித்தன, கருத்துக் கணிப்புகளும் வெளியிட்டன. ஆனால், பாஜகவுக்கு கிடைத்த இடங்கள் 138தான். அத்துடன் வாக்கு சதவீதமும் 22.16% ஆக குறைந்து போனது. அப்போது காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தது.

2009-ல் பாஜக
கடந்த தேர்தலில் இதைவிட படுமோசமான தோல்வியைத் தழுவியது பாஜக. அந்த தேர்தலிலும் கூட பாஜகவே ஆட்சி அமைக்கும் என்று ஊடகங்கள் கூறின. ஆனால் பாஜக 116 இடங்களை மட்டுமே பெற்றது. அதன் வாக்கு சதவீதம் 18.80% ஆக 1989 நிலைமையை நோக்கி பயணித்தது.

2014ல் தேர்தல் அதிசயம்?
இந்த தேர்தலிலும் பாஜக 220 முதல் 300 இடங்கள் வரை வெல்லும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. மோடி அலையால் இது சாத்தியம் என அடித்துக் கூறுகின்றன.

இந்திரா படுகொலை
இந்திய தேர்தல் வரலாற்றில் இந்திரா படுகொலை செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற 1984ம் ஆண்டுதான் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 49% வாக்குகளைப் பெற்றது. மொத்தம் 415 இடங்களைக் கைப்பற்றியது. அதே காங்கிரஸ் கட்சி ராஜிவ் காந்தி படுகொலைக்குப் பிந்தைய தேர்தலில் கூட 35.66% வாக்குகளையே பெற்றது. 244 இடங்களைத்தான் பிடித்தது.

இப்போது..
இந்திரா அலை, ராஜிவ் அலைகளைவிட மிகப் பெரிய அலை.. மோடி சுனாமி என்கின்றன இந்திய ஊடகங்கள்.. ஒருவேளை நாளை ஊடகங்கள் கணித்தபடி பாஜக மிராக்கிள் வெற்றியை பெற்றால் நிச்சயம் மோடி சுனாமி என்று அறுதியிட்டுத்தான் சொல்ல வேண்டும்.












Click it and Unblock the Notifications