பாஜக டெல்லியில் ஆட்சியை பிடிப்பது ஜுஜுபி: வெங்கய்ய நாயுடு சொல்கிறார்
ஹைதராபாத்: ஆம் ஆத்மி கட்சி மக்களிடையே மதிப்பிழந்துவிட்டதால், டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. எளிதில் வெற்றிபெறும் என பா.ஜ.க. மூத்த தலைவரும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சருமான வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.
ஹைதராபாத்தில் நிருபர்களுக்கு வெங்கய்ய நாயுடு அளித்த பேட்டி: காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என உறுதியளித்ததற்கு மாற்றாக, அக்கட்சியுடன் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைத்தது. காங்கிரசின் ஆதரவை நம்பியிருந்ததால், காமன்வெல்த் ஊழல் உள்பட காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களுக்கு எதிராக ஆம் ஆத்மி எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
49 நாட்களில் ஆட்சியை பறிகொடுத்து புறமுதுகு காட்டி ஓடியது ஆம் ஆத்மி. எனவே அக் கட்சி மக்களிடையே மதிப்பை இழந்துவிட்டது, மக்களிடையே மதிப்பிழந்துவிட்டதால், டெல்லி சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. எளிதில் வெற்றிபெறும். டெல்லியில் காங்கிரஸ் என்ற ஒரு கட்சி இல்லவே இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.