அதிமுக ஆட்சியை டிஸ்மிஸ் செய்யக் கோர மாட்டோம்- பாஜக
டெல்லி: தமிழகத்தில் நடந்து வரும் அரசியல் நிகழ்வை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வருகிறோம். அதேசமயம், அதிமுக அரசை டிஸ்மிஸ் செய்யக் கோரும் திட்டம் பாஜகவிடம் இல்லை என்று அக்கட்சி கூறியுள்ளது.
தமிழகத்தில் ஜெயலலிதா சிறைக்குப் போய் விட்ட நிலையில் தற்போது ஆட்சியைப் பிடிக்கவும், அரியணை ஏறவும், அரசியல் லாபம் அடையவும் ஏகப்பட்ட குட்டிக் கட்சிகள் முட்டி மோத ஆரம்பித்துள்ளன.

தேமுதிக, பாமக, பாஜக ஆகியவை அதில் அதி தீவிரமாக இறங்கியுள்ளன. இதுவரை பேசாமல் இருந்து வந்த விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ் போன்றோர் தினசரி அறிக்கை விட்டு வருகின்றனர். பாஜகவோ, ரஜினி சார் எங்க கூட வந்திருங்க, நீங்கதான் அடுத்த முதல்வர் ப்ளீஸ் ப்ளீஸ் என்று பல முனைகளில் கெஞ்ச ஆரம்பித்துள்ளது.
மறுபக்கம் முக்கியக் கட்சியான திமுகவோ அமைதியான முறையில் காய் நகர்த்த ஆரம்பித்துள்ளது. இடதுசாரி கட்சிகள் அமைதியாக உள்ளன. பிற கட்சிகள் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் தமிழக பாஜக பொறுப்பாளரான முரளிதர ராவ் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கைதுக்குப் பிறகு தமிழக அரசியல் நிகழ்வுகளை பாஜக உன்னிப்பாக கவனித்து வருகிறது.
தற்போது தமிழகத்தில் ஒரு ஸ்திரமற்ற நிலை காணப்படுகிறது. அடுத்து என்ன நடக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. தற்போதைய மாநில அரசு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சரிவர பராமரிக்கும் என்று நம்புகிறோம். அதில் மாநில அரசு தோல்வியுற்றால் சட்டம் தனது கடமையைச் செய்யும்.
இருப்பினும் இப்போதைக்கு தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல் செய்ய வேண்டும் என்று நாங்கள் கோரப் போவதில்லை.
பாஜகவைப் பொறுத்தவரை கர்நாடகத்தில் வலுவாக உள்ளோம். ஆந்திராவிலும் வலுவாக உள்ளோம். எங்களது அடுத்த முக்கிய இலக்கு தமிழகம்தான். அங்கு எங்களது பலத்தை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம் என்றார் ராவ்.












Click it and Unblock the Notifications