மகளிர்தின விழாவில் களேபரம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் முகத்தில் ‘மை’ பூசிய வாலிபர் கைது
டெல்லி: ஆம் ஆத்மி தலைவர் யோகேந்திர யாதவ் முகத்தில் மையைப் பூசிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நேற்று டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற மகளிர் தின விழாவில் கலந்து கொண்டார் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான யோகேந்திர யாதவ்.
விழா தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசினார் யோகேந்திர யாதவ். அப்போது பின்னால் இருந்து திடீரென்று பாய்ந்து வந்த தொண்டர் ஒருவர், யோகேந்திராவின் கழுத்தை கெட்டியாக பிடித்தபடி முகம் முழுவதும் கறுப்பு மையை பூசினார்.
யோகேந்திர யாதவ்வைச் சுற்றி இருந்த தொண்டர்கள் சுதாரிப்பதற்குள் இச்சம்பவம் நடந்து விட்டது. உடனடியாக மை பூசிய வாலிபரை பிடித்த தொண்டர்கள், அவரை அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
அந்த வாலிபரைக் கைது செய்த போலீசார் அவரது மனநிலை குறித்து சோதிப்பதற்காக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவரது பெயர் சாகர் பண்டாரி (வயது 28) என்பது தெரிய வந்தது.
ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் போல் தொப்பியும் பேட்ஜும் அணிந்திருந்து வந்திருந்ததால் சாகர் பண்டாரி மீது யாருக்கும் சந்தேகம் வரவில்லை என ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையே நடந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த யோகேந்திர யாதவ், ‘‘தற்போது பின்னால் இருந்து என்னை தாக்கி உள்ளனர். அடுத்த முறை எதிரில் இருந்து தாக்குவார்கள்'' என்றார்.