ரத்தமும் நீரும் ஒன்றாக ஓட முடியாது…. பாகிஸ்தான் மீது பாயும் மோடி
டெல்லி: ரத்தமும் நீரும் ஒன்றாக ஓட முடியாது என்று சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்த மறுபரிசீலனை குறித்த கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.
அண்மையில், பாகிஸ்தான் தீவிரவாதிகளால் காஷ்மீரில் உள்ள யூரி ராணுவ முகாம் மீது தாக்கதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான்தான் காரணம் என்று இந்தியா குற்றம் சாட்டியது. ஆனால் இதனை பாகிஸ்தான் மறுத்துள்ளது.
என்றாலும், இந்தியா அதனை ஏற்க மறுத்துள்ளதையடுத்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஒரு பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது. இந்த ஒப்பந்தம் 1960ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவுக்கும் பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் அயூப் கானுக்கும் இடையே ஏற்பட்டது.
இந்த ஒப்பந்தப்படிதான் இந்தியாவில் உள்ள இமயமலையில் உருவாகும் பியாஸ், ரவி, சட்லஜ், சிந்து, செனாப் ஆகிய 5 நதிகளின் நீரையும் இந்தியாவும் பாகிஸ்தானும் பகிர்ந்து கொண்டு வருகிறது. இந்த நீரை இந்தியா முறையாக வழங்குவதில்லை என்று சர்வதேச தீர்ப்பாயத்தில் பாகிஸ்தான் ஏற்கனவே புகார் செய்துள்ளது.
இந்நிலையில், இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற நோக்கில் நேற்று பிரதமர் மோடி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத் துறை செயலாளர் ஜெய்சங்கர், நீர்வளத்துறை செயலாளர் சசி சேகர் மற்றும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ரத்தமும், தண்ணீரும் ஒன்றாக ஓட முடியாது என்று மிக காட்டமாக பேசியுள்ளார்.
இந்தக் கூட்டத்தின் முடிவில் இமயமலையில் உற்பத்தியாகும் ஆறுகளின் நதி நீரை ஜம்மு காஷ்மீரின் விவசாயத்துக்கு அதிகளவில் பயன்படுத்த இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஒப்பந்தத்தின் செயல்பாட்டை உடனடியாக மாற்றியமைக்க அமைச்சர்கள் குழுவை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
சிந்து நதி நீர் ஒப்பந்தம் மறுபரிசீலனை கூட்டம் குறித்து ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் நிர்மல் சிங், கூட்டத்தில் எடுக்கப்படும் எந்த முடிவுக்கும் மாநில அரசு முழு ஒத்துழைப்பை அளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, சிந்து நதி நீர் ஒப்பந்தம் அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும் அதனை சட்டப்படி செல்லாததாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தொடரப்பட்டு அது உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சர்மா மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த தலைமை நீதிபதி டி எஸ் தாக்கூர், நீதிபதி கான்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இதை அவசரமாக விசாரிக்க தேவையில்லை. அரசியலை ஒதுக்கி வையுங்கள் இந்த விவகாரம் வழக்கம் போல் விசாரிக்கபடும் என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications