கர்நாடகா வசம் மீண்டும் ரயில்வே துறை: சென்னை-பெங்களூர் புல்லட் ரயிலுக்கு வாய்ப்பு
டெல்லி: கர்நாடகாவுக்கும் ரயில்வே அமைச்சகத்துக்கும் அப்படி என்ன தொடர்போ தெரியாது, சதானந்தகவுடா அம்மாநிலத்தை சேர்ந்த 8வது ரயில்வே அமைச்சர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.மத்திய அரசில் ரயில்வே அமைச்சகம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் 2வது பதவிக்காலத்தில், ரயில்வே அமைச்சராக கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜுனகார்கே பதவி வகித்தார். இப்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் சதானந்தகவுடாவுக்கு அத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜாபர் ஷெரிப், ஜார்ஜ் பெர்ணாண்டஸ்
இதற்கு முன்பு கர்நாடகாவை சேர்ந்த தாசப்பா, பூனாச்சா, கெங்கல் ஹனுமந்தய்யா, டிஎம்ஏ.பை, ஜார்ஜ் பெர்ணாண்டஸ், ஜாபர் ஷெரிப் ஆகியோரும் அப்பதவியை வகித்துள்ளனர். இதில் கர்நாடகாவை சேர்ந்தவராக இருந்தாலும், ஜார்ஜ் பெர்ணாண்டஸ் பிகார் மாநிலம் முசாபர்நகர் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

கர்நாடகாவுக்கு பயனில்லை
இத்தனைபேர் அமைச்சர்களாக இருந்தாலும் தென்மாநிலங்களிலேயே கர்நாடகாவில்தான் ரயில்பாதைகள் குறைவு. தேசிய அளவில் ரயில்பாதை நெருக்க சராசரி 19.27 கிலோமீட்டர்கள் என்றால், கர்நாடகாவில் அது 15.72 கிலோமீட்டர் மட்டுமே. மோடி தலைமையிலான அமைச்சரவையில் இந்த நிலை மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூரில் மின்சார ரயில்
சென்னை, மும்பையைபோல பெங்களூரில் மின்சார ரயில் சேவை திட்டத்தை துவங்க வேண்டும், பெங்களூர்-மைசூர் ரயில்பாதையை இருவழித்தடமாக மாற்ற வேண்டும், பெங்களூர்-சென்னை நடுவே புல்லட் ரயில் இயக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. சதானந்தகவுடா இக்கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்று பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.

புல்லட் ரயிலுக்கு கர்நாடகா பச்சைக்கொடி
சென்னை-பெங்களூர்புல்லட் ரயில் திட்டத்தை மைசூர் வரை நீட்டித்து செயல்படுத்த தயாராக உள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தாரமையா ஏற்கனவே அறிவித்துள்ளார். இதற்காக ஜப்பான் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியையும் கர்நாடக அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் சதானந்தகவுடா இத்திட்டத்துக்கு உதவினால், புல்லட் ரயில் இயக்கம் சாத்தியப்படும்.

ஒன்றரை மணி நேரத்தில் சென்னை
சென்னையை சேர்ந்த ஏராளமான சாப்ட்வேர் இன்ஜினியர்கள் பெங்களூரில் பணியாற்றுகிறார்கள். வார இறுதியில் அவர்கள் சொந்த ஊர் திரும்புகிறார்கள். புல்லட் ரயில் இயக்கப்பட்டால் பெங்களூர் மற்றும் சென்னை நடுவேயான 360 கிலோமீட்டர் தூரத்தை ஒன்றே கால் மணி நேரத்தில் கடக்க முடியும். புல்லட் ரயில் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியது.

இப்போதைக்கு சதாப்தி
இப்போது பெங்களூர்-சென்னை நடுவே இயக்கப்படும் சதாப்தி எக்ஸ்பிரஸ்தான் அதிவேக ரயிலாக உள்ளது. அதிகபட்சமாக மணிக்கு 140 கிலோமீட்டர் வரை செல்லக்கூடிய இந்த ரயில் இவ்விரு நகரங்களையும் ஐந்து மணி நேரத்தில் கடக்கிறது.












Click it and Unblock the Notifications