கடல் வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற பாக். தீவிரவாதிகள்- நடுக்கடலில் நடந்தது என்ன?
டெல்லி: குஜராத் கடல் பகுதி வழியாக இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைய முயன்ற தீவிரவாதிகளை இந்திய கடற்படை தடுக்க முயன்றபோது, அவர்கள் பயணம் செய்து வந்த மீன் பிடி படகு வெடி வைத்து தகர்க்கப் பட்டது குறித்து பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
குஜராத் கடல்பகுதி வழியாக தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவி நாசவேலைகளை நடத்த திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்து வந்தது. இதன்படி கராச்சியில் இருந்து மீன்பிடிக் கப்பல் மூலமாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் குஜராத் வழியாக இந்தியாவுக்குள் நுழைய திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், புத்தாண்டுக்கு முதல் நாள் இரவு குஜராத்தின் போர்பந்தர் கடல் பகுதியில் பாகிஸ்தான் மீன்பிடிக் கப்பல் ஒன்று அத்துமீறி நுழைய இருப்பதாக இந்திய கடலோரக் காவல்படைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அப்பகுதியில் கடலோரக் காவல்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது புத்தாண்டு அன்று அதிகாலையில் சந்தேகத்திற்குரிய வகையில் பாகிஸ்தான் மீன்பிடிக் கப்பல் ஒன்று எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைய முற்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது.
துப்பாக்கிச் சூடு:
அதனைத் தொடர்ந்து அந்த மீன்பிடிக் கப்பலை நோக்கி இந்திய கடலோரக் காவல்படை வீரர்கள் விரைந்து சென்றனர். இந்திய கடலோரக் காவற்படையினர் தங்களை நோக்கி வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாகிஸ்தான் மீன்பிடிக் கப்பல் வேகமாகத் தப்பிச் செல்ல முயன்றது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியக் கடலோரக் காவல்படை துப்பாக்கிச் சூட்டை நடத்தியது. இதனால் தப்பிச் செல்வது இயலாத காரியம் என முடிவு செய்த பாகிஸ்தான் மீன் பிடிக் கப்பலில் இருந்தவர்கள் உடனடியாக அதை வெடி வைத்து தகர்த்துள்ளனர். இச்சம்பவத்தின் மூலம், அக்கப்பலில் தீவிரவாதிகள் இருந்தது உறுதியானது.
வெடி வைத்து தகர்ப்பு:
குஜராத்தின் போர்பந்தர் கடல் பகுதியில் 365 கி.மீ தூரத்தில் நடந்துள்ளது. வெடி வைத்து தகர்க்கப்பட்ட அந்த பாகிஸ்தான் மீன் பிடிக் கப்பலில் 4 தீவிரவாதிகள் இருந்துள்ளனர்.
இவ்வாறு பாதுகாப்பு அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது மும்பை கடல் பாதை வழியாகத்தான் அவர்கள் வந்திருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. எனவே மும்பை தாக்குதல் போன்ற சதி திட்டத்துடனேயே இம்முறையும் தீவிரவாதிகள் வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications