டெல்லி, பெங்களூர் விமான நிலையங்களுக்கு அடுத்தடுத்து வந்த வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
பெங்களூர்: டெல்லி மற்றும் பெங்களூரில் இருந்து புறப்படும் 6 விமானங்களுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்று தெரியவந்தது.
நேற்று நள்ளிரவில் டெல்லி விமான நிலையம் மற்றும் பெங்களூர் விமான நிலைய அதிகாரிகளுக்கு மர்ம போன் அழைப்பு வந்தது. டெல்லி அதிகாரிகளிடம் பேசிய மர்ம நபர், ஹாங்காங் செல்லும் இரு விமானங்களிலும், ஜூரிச் செல்லும் விமானத்திலும் வெடிகுண்டு இருப்பதாக கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதில் ஹாங்காங் செல்லும் விமானம், டேக்-ஆப் ஆகிவிட்ட நிலையிலும், பைலட்டுக்கு தகவல் கொடுத்து உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டது. பயணிகளை இறக்கிவிட்டு சோதனைகள் நடத்தப்பட்டன. இதேபோல மற்ற விமானத்திலும் அதிகாரிகள் வெடிகுண்டு சோதனைகளை மேற்கொண்டனர்.
அதேநேரம், பெங்களூர் விமான நிலையத்திற்கு வநந்த தொலைபேசி அழைப்பில் பேசிய மர்ம நபர், ஏர் பிரான்ஸ், லுப்தான்ஸா மற்றும் ஹஜ் செல்லும் விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்து போனை கட் செய்தார். இதையடுத்து பெங்களூர் விமான நிலையத்திலும் பாதுகாப்பு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
நீண்ட தேடுதலுக்கு பிறகு டெல்லி மற்றும் பெங்களூர் விமான நிலையங்களுக்கு வந்த தொலைபேசி அழைப்புகள் புரளி என்பது தெரியவந்தன. போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடிவருகின்றனர். அந்த நபர், பெங்களூரில் இருந்துதான் இரு விமான நிலையங்களுக்கும் போனில் பேசியுள்ளது அம்பலமாகியுள்ளது. விரைவில் போலீசாரின் பிடியில் அவர் சிக்குவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications