உச்ச நீதிமன்றத்தின் கோபத்துக்கு ஆளானவர்.... தற்காலிக சபாநாயகர் போப்பையா!
எடியூரப்பாவுக்கு ஆதரவாக செயல்பட்டு, எம்எல்ஏக்களை தகுதி நீ்க்கம் செய்ததற்காக உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டவர்தான், கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகர் போப்பையா.
Recommended Video

பெங்களூரு: கர்நாடக சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ள போப்பையா, ஏற்கனவே சபநாயகராக இருந்தபோது, எடியூரப்பாவுக்கு ஆதரவாக செயல்பட்டு, உச்ச நீதிமன்றத்தின் கோபத்துக்கு ஆளானவர்.
கர்நாடகா சட்டசபையில் எடியூரப்பா அரசு நாளை பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. இதற்காக தற்காலிக சபாநாயகராக பாஜகவைச் சேர்ந்த கே.ஜி. போப்பையா நியமிக்கப்பட்டுள்ளார்.

சட்டசபையின் மிகவும் மூத்த எம்எல்ஏவான காங்கிரஸ் கட்சியின் ஆர்வி. தேஷ்பாண்டே தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேஜி போப்பையாவை தற்காலிக சபாநாயகராக ஆளுநர் வாஜூபாய் வாலா நியமித்துள்ளார்.
தேஷ்பாண்டேவுக்கு அடுத்ததாக, பாஜகவைச் சேர்ந்த உமேஷ் விஸ்வநாத் கட்டிதான் மூத்த எம்எல்ஏ. ஆனால் அவருடைய பெயரையும் ஆளுநர் பரிசீலிக்கவில்லை. ஆளுநரின் இந்த முடிவும் சர்ச்சையாகி உள்ளது.
2008ம் ஆண்டு கர்நாடகா சட்டசபையின் தற்காலிக சபாநாயகராக போப்பையா நியமிக்கப்பட்டார். 2009 முதல் 2013 வரை சபாநாயகராக இருந்தார்.
2010ல், முதல்வராக இருந்த எடியூரப்பாவுக்கு எதிராக பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். அப்போது சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, பாஜகவைச் சேர்ந்த 11 பேர் மற்றும் 5 சுயேச்சை எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தார் சபாநாயகராக இருந்த போப்பையா.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், போப்பையாவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை கூறியது. அவருடைய உத்தரவும் ரத்து செய்யப்பட்டது. தற்போது அவர் மீண்டும் தற்காலிக சபாநாயகராகி உள்ளார். நாளை என்ன செய்யப் போகிறாரோ என்ற கிலி பலருக்கும் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications