ராஜஸ்தானில் ஆட்சி யாருக்கு! "காங்கிரஸ் vs பாஜக.." தேர்தல் வேற நெருங்கிடுச்சு.. வெளியான பரபர சர்வே
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கே எந்தக் கட்சி ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளது என்பது குறித்து லோக் பால் அமைப்பு நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது.
இப்போது ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களுக்கு மட்டும் வாக்குப்பதிவு நடைபெறவில்லை.

ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே மொத்தம் 200 இடங்கள் இருக்கும் நிலையில், அனைத்து தொகுதிகளுக்கும் வரும் நவ. 25ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.
ராஜஸ்தான்: அங்கே ராஜஸ்தானில் இப்போது அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு இருக்கிறது. அங்கே பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. அங்கே காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே நேரடியாகப் போட்டி நிலவுதால் இதில் யார் வெல்லப் போகிறார்கள் என்பது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. மேலும், அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக நடக்கும் கடைசி தேர்தல் என்பதாலும் இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
இதில் ஒரு பக்கம் காங்கிரஸ் எப்படியாவது ஆட்சியைத் தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில் இறங்குகிறது. மற்றொருபுறம் மோடியின் செல்வாக்கு, காங்கிரஸ் எதிர்ப்பு மனநிலை ஆகியவற்றை வைத்து ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று கணக்குப் போடுகிறது. இரு கட்சிகளும் ராஜஸ்தானில் கடைசிக் கட்ட பிரச்சாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில், இப்போது புது சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது.
புது சர்வே: அதாவது ராஜஸ்தானில் மொத்தம் 200 இடங்கள் இருக்கும் நிலையில், தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க எந்தவொரு கட்சிக்கும் 101 இடங்கள் தேவை. இருப்பினும், அங்கே போட்டி கடுமையாக இருப்பதால் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்று கூறப்பட்டுள்ளது. அங்கே அதிகபட்சமாக பாஜக 92-98 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும் கூட யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்று லோக் பால் அமைப்பு தனது சர்வேயில் கூறியுள்ளது.
கடும் போட்டி: அங்கே தற்போது ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் பாஜகவுக்கு கடும் போட்டி தரும் என்றும் காங்கிரஸ் அங்கே 87- 93 இடங்களில் வெல்லும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. அதேபோல மற்ற கட்சிகளும் சுயேச்சைகளும் 12 18 இடங்களில் வெல்வார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் கணிசமான இடங்களில் வெல்லும் நிலையில், அங்கே இந்த கட்சிகள் கேம் சேஞ்சராக உருவெடுக்கும்.
2018 ராஜஸ்தான் தேர்தல்: கடந்த 2018 தேர்தலைப் பொறுத்தவரை ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி சரியாக 100 இடங்களில் வெற்றி பெற்றது. அதேநேரம் பாஜகவால் 73 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது. காங்கிரஸ் இதர கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான கெலாட் ராஜஸ்தான் முதல்வராகப் பதவியேற்றார். இடையில் மத்தியப் பிரதேசத்தைப் போலவே இங்கும் சச்சின் பைலட் தலைமையில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இருப்பினும், அப்போது ஆட்சி காப்பாற்றப்பட்டது.
மேலும், ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே கடந்த பல தேர்தல்களாகவே ஆட்சியில் இருந்த கட்சி மீண்டும் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications