ஹைதராபாத் ராணுவ பகுதியில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட 11 வயது சிறுவன் பலி
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் ராணுவ பகுதியில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட 11 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
ஹைதராபாத்தில் உள்ள மெஹ்திபட்டினத்தில் இருக்கும் ராணுவ பகுதியில் 11 வயது சிறுவன் புதன்கிழமை மதியம் 2.45 மணிக்கு மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த சிறுவன் உஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
90 சதவீதம் தீக்காயம் அடைந்த சிறுவனுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிறுவன் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்தார். முன்னதாக அவர் தன் மீது தீ வைத்தது சில ராணுவ வீரர்கள் என்று தெரிவித்துள்ளார்.
சிறுவன் மீது யார் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்கள், எதற்காக இப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை என ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் மஹேந்தர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
ராணுவ பகுதியில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் போலீசாருக்கு நாங்கள் ஒத்துழைப்பு அளித்து வருகிறோம் என்றார்.