போலி மார்பகப் பெருக்க கிரீம் விற்பனை.. மும்பையில் ஒருவர் கைது
மும்பை: மும்பையில் சட்டத்திற்கு புறம்பான வகையில், பிரபல நிறுவனங்களின் மார்பகப் பெருக்க கிரீம்களின் பெயரில் போலியாக விற்பனை செய்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இரண்டு பிரபலமான கம்பெனிகளின் பெயரினை போலியாக உபயோகித்து இந்த விற்பனையை செய்தது தெரியவந்துள்ளது.
தானேவைச் சேர்ந்த நாரயண் மிரா என்கின்ற பட்டேல்தான் கைது செய்யப்பட்டவர். அவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. அவரிடமிருந்து கிரீம் தயாரிப்பு இயந்திரங்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அவற்றின் மதிப்பு கிட்டதட்ட 24.48 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
"போலியாக உபயோகிக்கப்பட்ட பெயர்களில் ஒன்றான நிறுவனம் இதுகுறித்த புகாரினை அளித்தது. தயா நகரினைச் சேர்ந்த பாட்டேல், மால்வானி பகுதியில் இந்த கிரீமினை தயாரித்து விற்பனை செய்வது தெரியவந்தது. ஒரு ரூமினை வாடகைக்கு எடுத்து இந்த விற்பனையை அவர் செய்து வந்துள்ளார்" என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த கிரீம் விற்பனையை கடந்த இரண்டு மாதங்களாக அவர் செய்து வந்துள்ளார். மேலும், இதுவரையில் விற்பனை செய்யப்பட்டுள்ள கிரீமின் அளவினையும் போலீசார் கணக்கிட்டு வருகின்றனர்.
"பட்டேல் விசாரணையில் மற்றுமொரு முக்கிய விஷயத்தினை தெரிவித்துள்ளார். அவர் மற்றொருவருக்காக வேலை செய்ததாகவும், அவரே இதற்கு முழுமுதற் காரணமென்றும் தெரிவித்தார். எனினும், எல்லா வகையிலும் இதுகுறித்து ஆராய்ந்து வருகின்றோம். " என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட கிரீம் மாதிரிகளை தர ஆய்விற்காக காவல் துறையினர் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.