குஜராத்தில் ரூ 3 லட்சம் லஞ்சப் பணம்... அத்தனையும் புத்தம் புதிய 2000 ரூபாய் நோட்டுகள்!
குஜராத்தில் துறைமுக அதிகாரிகள் இருவர் வீட்டில் இருந்து லட்சக்கணக்கில் லஞ்சப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள இரண்டு துறைமுக அதிகாரிகளிள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் ஆய்வு நடத்தியதில் புதிய நோட்டுகளாய் இருந்த லஞ்சப்பணம் கட்டுக்கட்டாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அகமதாபாத்தில் இயங்கி வரும் தனியார் மின் நிறுவனத்தின் நிலுவை பணிகளை முடித்து தர கண்ட்லா துறைமுக அதிகாரிகள் இரண்டு பேர் 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். இதனை இடைத்தரகர் ஒருவர் பெற்றுத் தந்துள்ளார்.

இந்நிலையில் லஞ்சம் கொடுத்த தனியார் நிறுவன உரிமையாளர்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் ஸ்ரீனிவாசு என்ற அதிகாரியின் வீட்டில் திடீர் ஆய்வு நடத்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் கணக்கில் வராத 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பணத்தை கைப்பற்றியுள்ளனர். அவை அத்தனையும் புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாகும்.
கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்காக 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்த மோடி புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தினார். இந்த புதிய நோட்டுகள் கடந்த 11ஆம் தேதி தான் புழக்கத்துக்கு வந்தன. இந்நிலையில் புதிய நோட்டுகளே லஞ்சப்பணமாக அரசு அதிகாரிகளின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக துறைமுக அதிகாரிகள் ஸ்ரீனிவாசு, கோம்டேக்கர் மற்றும் இருவருக்கும் மீடியேட்டராக இருந்த மற்றொரு நபர் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications