கோவாவில் தொடங்கியது பிரிக்ஸ் மாநாடு.. மோடி-சீன அதிபர் சந்திப்பு! #BRICS2016
பானாஜி: கோவாவில் இன்று நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம், பிரதமர் மோடி இன்று மாலை சந்தித்து முக்கிய விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரிக்ஸ் நாடுகளின் 2 நாள் உச்சி மாநாடு இன்று பனாஜி நகரில் தொடங்கியது. இதில் சீனா அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் மோடி இன்று மாலை சந்தித்தார். இந்தியா சீனா இடையே பல்வேறு அம்சங்கள் குறி்த்து ஆலோசனை நடத்தினார். இதனிடையே சீனா அதிபருடான சந்திப்பு பயனுள்ளதாக இருந்ததாக மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தென் ஆப்பிரிக்க அதிபருடன் இருநாட்டு உறவுகள் குறித்து விவாதித்ததாகவும் மோடி தெரிவித்துள்ளார்.
பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளைக் கொண்ட அமைப்பு 'பிரிக்ஸ்' ஆகும். இதன் உச்சி மாநாடு ஆண்டுதோறும் ஒவ்வொரு நாட்டில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு மாநாடு ரஷியாவின் உபா நகரில் நடந்தது. இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாடு இந்தியாவின் கோவா மாநிலத் தலைநகரான பனாஜி நகரில் இன்றும், நாளையும் நடக்கிறது.
முதல் நாளில் பிரிக்ஸ் மற்றும் இந்தியா, வங்காளதேசம், பூடான், மியான்மர், நேபாளம், இலங்கை, தாய்லாந்து ஆகிய நாடுகள் அடங்கிய வங்கக் கடல் பகுதியில் பல்துறை தொழில் நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான 'பிம்ஸ்டெக்' அமைப்பு மாநாடு நடந்தது. இதில் இந்த நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இந்தியத் தலைமையின் கீழ் நடைபெறும் இந்த மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமீர் புடின், சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் ஜனாதிபதி மைக்கேல் தெமர், தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜூமா ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.
பிரிக்ஸ் மாநாட்டின் இடையே ஜின்பிங்கை மோடி இன்று மாலை சந்தித்து இருநாடுகள் உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.