அப்பாவி மக்கள் 8 பேர் கொலை: 14 பாக். ராணுவ முகாம்களை அழித்து பாடம் கற்பித்த பி.எஸ்.எப்.
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் காஷ்மீர் எல்லையில் வசித்து வந்த 8 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லை பாதுகாப்பு படை பாகிஸ்தான் ராணுவத்தின் 14 நிலைகளை அழித்துள்ளது.
யூரி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவம் எல்லை தாண்டி சென்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்களை அழித்தது. இதையடுத்து காஷ்மீரில் சர்வதேச எல்லை மற்றும் எல்லை கட்டுப்பாடு கோட்டுப்பகுதியில் உள்ள இந்திய ராணுவ நிலைகள் மற்றும் குக்கிராமங்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது.
நேற்று எல்லையோரம் உள்ள சம்பா, ரஜோரி, ஜம்மு, பூஞ்ச், ராம்கர், நவ்ஷேரா, பாலகோட் பகுதிகளை நோக்கி எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 2 குழந்தைகள் உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர், 22 பேர் காயம் அடைந்துள்ளனர்.
அப்பாவி பொதுமக்கள் 8 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் எல்லை பாதுகாப்பு படை பாகிஸ்தான் ராணுவத்தின் 14 நிலைகள் மீது தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.
ஜம்முவில் உள்ள ராம்கர் மற்றும் அர்னியா செக்டர்கள் அருகே சர்வதேச எல்லையையொட்டி இருந்த பாகிஸ்தான் நிலைகள் அழிக்கப்பட்டுள்ளன.