பாட்னாவில் எதிர்க்கட்சிகள் சங்கமம் : முதுகில் குத்துற அரசியல் போதும்... மாயாவதி சரமாரி விமர்சனம்!
லக்னோ: பீகார் மாநிலம் பாட்னாவில் நாளை நடைபெறும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு உ.பி. முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி அழைக்கப்படவில்லை. இருப்பினும் எதிர்க்கட்சிகளின் சங்கமத்தை கடுமையாக விமர்சித்துள்ளார் மாயாவதி.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்காக பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இம்முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். இதன் முதல் கட்டமாக் பீகார் தலைநகர் பாட்னாவில் நாளை காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

பாட்னாவில் நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல கட்சிகள் பங்கேற்க உள்ளன. இதற்காக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாட்னா புறப்பட்டு சென்றுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மமதா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாட்னாவில் முகாமிட்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியை அழைப்பது தொடர்பாக இருவேறு கருத்துகள் தொடர்ந்து இருந்தன.
இந்நிலையில் பாட்னா எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தை விமர்சித்து மாயாவதி தமது சமூக வலைதளப் பக்கங்களில் எழுதி இருப்பதாவது: லோக்சபா தேர்தலில் உ.பி. மாநிலத்தின் 80 தொகுதிகள் மிக முக்கியமானவை. லோக்சபா தேர்தலின் போது எதற்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பது அவசியமானது. ஆனால் பாட்னாவில் கூடும் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறை அப்படியானதாக இருப்பதாக தெரியவில்லை. பாட்னாவில் கூடுகிற எதிர்க்கட்சிகள் பொதுவாக மக்களிடம் எப்படியான நம்பிக்கையை ஏற்படுத்துகிறோம் என்பதை விளக்கவும் இல்லை. நேருக்கு நேர் புகழ்வது, முதுகில் குத்துவது என்கிற அரசியல் எத்தனை காலம் தொடரப் போகிறது? இவ்வாறு மாயாவதி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications