கருப்பு பணத்தை வெள்ளையாக்க 4 மாதம் அவகாசம்... மறைத்தால் தண்டனை!
டெல்லி: உள்நாட்டில் இதுவரை கணக்கில் காட்டப்படாமல் உள்ள கருப்புப் பணம் பற்றிய தகவலை தெரிவித்து அதை வெள்ளையாக்குவதற்கு 4 மாத காலம் அவகாசம் வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பொது பட்ஜெட் நேற்று நாடாளுமன்ற லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் 9 தூண்கள் என்று விவசாயம், ஊரகத்துறை, சமூக நலத் துறை, கல்வித் துறை, கட்டமைப்பு, நிதித் துறை சீர்திருத்தம், எளிதாக வர்த்தகம் புரிதல், வரி சீர்திருத்தங்கள் என்று பிரித்து ஒவ்வொரு துறைக்கும் முக்கியத்துவம் கொடுத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.
தாமாக முன்வந்து கணக்கில் காண்பிக்காத பணத்தை 45% வரி மற்றும் உபரித் தொகையாக செலுத்தும் பட்சத்தில் எந்தவித கேள்வியும் அபராதமும் சிறை தண்டணையும் இல்லாமல் ஏற்று கொள்ளப்படும் என்று அறிவித்துள்ளார். இத்திட்டம் 01.06.15 முதல் 30.09.16 வரை நடைமுறையில் இருக்கும். இந்த திட்டத்தை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் இதனை அதிகம் பேர் பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புண்டு.
இது குறித்து நேற்று அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது:
கருப்பு பணம்
கருப்புப் பணத்தை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி, வரி ஏய்ப்பு செய்வோரை கண்டுபிடிப்பதற்கான தொழில் நுட்ப முறைகளை வருமான வரித் துறை புகுத்தி உள்ளது. வரி ஏய்ப்பு செய்பவர்களைக் கண்டறிந்தால் அவர்களிடம் அபராதம் வசூலிப்பதுடன் சிறை தண்டனை வழங்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
பணம் பதுக்கலை தடுக்க
கடந்த ஆண்டு வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கருப்புப் பணம் பற்றிய தகவலை தாமாக முன் வந்து தெரிவிக்க 3 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது.
4 மாதம் அவகாசம்
அந்த வகையில், இந்த ஆண்டு உள்நாட்டில் கணக்கில் காட்டாமல் உள்ள ரொக்கம் மற்றும் சொத்துகள் பற்றிய விவரங்களை வருமான வரித் துறைக்கு தெரிவிக்க 4 மாதம் அவகாசம் வழங்கப்படும். அதாவது வரும் ஜூன் 1ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதிக்குள் கருப்பு பணம் பற்றிய தகவலை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்படும்.
45% வரியாக செலுத்தலாம்
இதன்படி, தகவல் தெரிவிக்கப் படும் மொத்த சொத்து மதிப்பில் 30 சதவீதம் வரி, 7.5 சதவீதம் உபரி வரி, அபராதம் 7.5 சதவீதம் என 45 சதவீதத்தை 2 மாதங்களில் செலுத்தினால் போதும். உபரி வரியாக வசூலிக்கப்படும் தொகை வேளாண் துறை மற்றும் கிராம பொருளாதார வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.
விசாரணை கிடையாது
தாமாக முன்வந்து கருப்பு பணம் பற்றிய தகவலை தெரிவித்துவிட்டால் வருமான வரி, செல்வ வரி சட்டங்களின்படி வரி ஏய்ப்பு தொடர்பான விசாரணையோ சோதனையோ நடத்தப்படமாட்டாது. அத்துடன் இது தொடர்பான தண்டனையிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம்.
கடும் நடவடிக்கை
இந்த காலக்கெடு முடிந்த பிறகு கருப்புப் பணம் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர் மீது வருமான வரி சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.