கேரள சட்டசபையில் அமளி... தடியடிக்கு இடையில் பட்ஜெட் தாக்கல்
திருவனந்தபுரம்: எதிர்க்கட்சியினரின் கடும் அமளிகளுக்கிடையே கேரள சட்டசபையில் பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார் அம்மாநில நிதியமைச்சர் மாணி.
கேரளாவில் மது பார்களை மீண்டும் திறக்க அனுமதி பெற்று தருவதாக கூறி, அம்மாநில நிதியமைச்சர் மாணி ரூ.1 கோடி லஞ்சம் பெற்றதாக மது பார் உரிமையாளர் சங்கத்தலைவர் பிஜு ரமேஷ் பரபரப்பு குற்றச்சாட்டை கூறினார். இது கேரள அரசியலில் பெரும் சலசலப்பை உண்டாக்கியது. அதனைத் தொடர்ந்து, மாணியை ராஜினாமா செய்யக்கோரி எதிர்க்கட்சியான கம்யூனிஸ்டு கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று சட்டசபையில் மாணி பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு இடதுசாரிகள், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மாணியை பட்ஜெட் தாக்கல் செய்ய விடக் கூடாது என்ற எண்ணத்தில் நேற்று இரவு முதலே எதிர்க்கட்சியினர் தங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலையிலும் சட்டசபைக்கு வெளியே நின்று அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால், அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.
இறுதியில், பலத்த பாதுகாப்போடு, சட்டசபை பாதுகாவலர்கள் சுற்றி பாதுகாப்பிற்கு நிற்க மாணி பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பட்ஜெட் தாக்கலின் போது எதிர்க்கட்சி தலைவரை சட்டசபைக்குள் அனுமதிக்கவில்லை. இந்த தொடர் சம்பவங்களால் கேரள சட்டசபை வளாகம் போர்க்களம் போல் திகழ்கிறது.
சட்டசபை வளாகத்திற்கு அருகே பெருமளவில் எதிர்கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திரண்டதால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications