நிதின் கட்கரி வீட்டில் ஒட்டு கேட்பு கருவி.. பாஜக விளக்கமளிக்க மன்மோகன் சிங் கோரிக்கை
டெல்லி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வீட்டில் ஒட்டுக் கேட்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் குறித்து மத்திய அரசு நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
மத்தியப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சரும், முன்னாள் பாஜக தலைவருமான நிதின் கட்கரியின் வீட்டில், ஒட்டுக்கேட்பு சாதனங்கள் கண்டுபிடிக்கப் பட்டதாக நேற்று ஊடகங்களில் வெளியான செய்தி பரபரப்பை உண்டாக்கியது.
சொந்த அமைச்சர்களையே நம்பாமல் பாஜக வேவு பார்ப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. ஆனால், ஒட்டு கேட்புக் கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் ஊடகங்களின் யூகம் என மறுப்புத் தெரிவித்தார் நிதின் கட்கரி.
ஆனபோதும், இந்த மறுப்பை ஏற்றுக் கொள்ளாத எதிர்க்கட்சிகள் இது தொடர்பாக பாஜக விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
நேற்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி அளித்த இப்தார் விருந்தில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இது தொடர்பாக பாஜக நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், ‘அமைச்சர் வீடுகளே இவ்வாறு ஒட்டுக் கேட்கப்படுவது விரும்பத்தக்க செயல் அல்ல. எனவே, இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். எப்படி இவ்வாறு நடந்தது என்பதை நாடாளுமன்றத்தில் பாஜக விளக்க வேண்டும்' என அவர் தெரிவித்தார்.