கொடுமையே.. டெல்லியில் 11 பேர் மர்மமாக இறந்த குடும்பத்தில் எஞ்சிய வளர்ப்பு நாய் மாரடைப்பால் மரணம்
டெல்லி: டெல்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் மர்மமான முறையில் இறந்த வீட்டிலிருந்து எடுத்து வளர்க்கப்பட்ட நாய் இப்போது மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி நகரில் உள்ள புராரி என்ற பகுதியில் ஜூலை 1ம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தூக்கிட்டு, இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இந்த மரணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.
இது தற்கொலையா அல்லது மாந்திரீக அடிப்படையிலான ஏதாவது நடைமுறையா என்பது போன்ற பல்வேறு கேள்விகள் இன்னும் பதில் அளிக்க படாமலேயே உள்ளது.

6 வயது நாய்
இந்த வீட்டின் மாடியில் ஆறு வயது மதிக்கத்தக்க இந்தியன்-பிட்புல் மிக்ஸ் ஜாதியை சேர்ந்த, அந்த வீட்டு செல்ல நாய் டாமி கட்டி வைக்கப்பட்டிருந்தது. இதை யார் கட்டி வைத்திருந்தார்கள் என்பது தெரியாது. போலீசார் அந்த வீட்டில் சோதனை நடத்தியபோது இந்த நாயை மீட்டு நாய்கள் காப்பகத்திற்கு அளித்தனர்.

தத்து எடுத்து வளர்த்தார்
சஞ்சய் மகபத்ரா என்பவர் இந்த நாயை தத்து எடுத்து வளர்த்து வந்தார். இந்த நிலையில் அந்த நாய் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சஞ்சய் மகபத்ரா கூறுகையில், முதல் இரு நாட்கள் அந்த நாய் சரியாக உணவு உண்ணாமல் இருந்தது, மிகவும் ஆக்ரோஷமாக காணப்பட்டது.

சரியான எடைதான்
இருப்பினும் அதனுடன் பழகி நட்பு பாராட்டிய பிறகு வேளாவேளைக்கு உணவு சாப்பிட ஆரம்பித்தது. டாமியின் உடல் எடை 35 கிலோ ஆகும். இது ஆரோக்கியமான எடை தான் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தினமும் வாக்கிங் கூட்டிச் செல்வது வழக்கம். ஞாயிற்றுக்கிழமையான நேற்று மதிய நேரத்தில் அதை வாக்கிங் அழைத்துச் சென்றேன். மாலை 6 மணி அளவில் திடீரென நாய் கீழே சுருண்டு விழுந்து இறந்து விட்டது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

என்ன காரணமாக இருக்கும்
இது குறித்து கால்நடை மருத்துவர்கள் கூறுகையில், சம்பவம் நடந்த வீட்டில் இருந்து மீட்கப்பட்ட முதல் இரு நாட்களுக்கு அந்த நாய்க்கு காய்ச்சல் இருந்தது. மருத்துவ சிகிச்சைகளுக்கு பிறகு அது இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஜூலை 2 மற்றும் ஜூலை பத்தாம் தேதி நாய்க்கு ரத்த பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அதில் எந்த பிரச்சினையும் இல்லை இருப்பினும் இந்த நாய் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளது என்று தெரிகிறது. மன அழுத்தம்தான் இதற்கு காரணமாக இருக்க கூடும். பிரேத பரிசோதனைக்கு பிறகு முழு விவரம் தெரியவரும். இவ்வாறு டாக்டர்கள் தெரிவித்தனர்.
|
புகாரி குடும்பத்தில் எஞ்சியது
மரணமடைந்த நாராயன் தேவிதான், அந்த குடும்பத்தின் மூத்த உறுப்பினராகும். அவரது பேரன் பிரசாந்த் சிங் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் வசித்து வருகிறார். அவர் சமீபத்தில் சஞ்சய்க்கு எழுதியிருந்த இமெயிலில், எங்கள் குடும்பத்தை சேர்ந்த எஞ்சியிருந்த ஒரு ஜீவனை நீங்கள் தத்து எடுத்து வளர்த்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது. என்னால் கூட அதை பராமரிக்க முடியாது. அந்த அளவுக்கு ஆக்ரோஷமான நாய், என்று கூறி பாராட்டியிருந்தார். இந்த நிலையில் டாமியின் மரணம் குறித்த தகவல் அந்த குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications