2 வாரமாக பதற்றத்தை தணிய விடாத கன்னட அமைப்புகள்.. தமிழக பஸ்கள் ஒசூரிலேயே நிறுத்தம்.. பயணிகள் அவதி
பெங்களூர்: இரு வாரங்களாக தமிழகம்-கர்நாடகா இடையே பஸ் போக்குவரத்து இல்லை என்பதால் பயணிகள் பெரும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக அதிகப்படியான போக்குவரத்து கொண்ட பெங்களூருக்கு பஸ்களை இயக்க முடியாதது தமிழக, கர்நாடக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு பெரும் இழப்பாகியுள்ளது.
10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீரை தமிழகத்திற்கு தர வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் கர்நாடகாவில் பதற்ற சூழ்நிலை உருவானது. இதையடுத்து கடந்த 5ம் தேதி, திங்கள்கிழமை, இரவு முதல், தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு அரசு பஸ்கள் இயக்கம் நிறுத்தப்பட்டது. பல லாரிகளும் இயங்கவில்லை.
போலீஸ் பாதுகாப்புடன் அம்மாநில பஸ்கள் தமிழகத்திற்குள் இயக்கப்பட்டு வந்தன. 9ம் தேதி நடைபெற்ற கர்நாடகா பந்த் மற்றும் அதன்பிறகு கர்நாடக பஸ்களும் தமிழகத்திற்கு இயக்கப்படவில்லை.
நடந்தே வரும் பயணிகள்
ஓசூர் பகுதிவரை வரும் தமிழக வாகனங்கள் அங்கேயே நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதன்பிறகு, பயணிகள் நடந்தே கர்நாடக எல்லையான அத்திபெலே பகுதிக்கு வருகிறார்கள். அங்கிருந்து பெங்களூர் உள்ளிட்ட கர்நாடக நகரங்களுக்கு பயணிக்கிறார்கள்.
பதற்றம் தொடருகிறது
இதனால் இரு மாநில பயணிகளுமே கடும் மன மற்றும் உடல் உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். ஆனால் கன்னட அமைப்பினர், தினம் ஒரு போராட்டம் என்ற வகையில் எல்லையில் நடத்தி பதற்றத்தை தணியவிடாமல் செய்து வருகின்றன.
கோர்ட்டில் வாதாட வேண்டியது
14வது நாளாக தொடரும், போக்குவரத்து நிறுத்த பிரச்சினையால் பயணிகள் அவதிப்படுகிறார்கள். சுப்ரீம்கோர்ட்டில் சிறப்பாக வழக்கை நடத்தி தங்களுக்கு சாதகமாக உத்தரவுகளை பெறுவதுதான் எந்த ஒரு மாநிலத்திற்கும் பலன் தரும். வேலை நிறுத்த போராட்டங்கள் சொந்த மக்களுக்கே கஷ்டத்தை தரும் என்பதற்கு இப்போது நடைபெறும் போராட்டங்கள் ஒரு உதாரணம்.
லாபம் பெருசு
சென்னை-பெங்களூர் இரண்டுமே நாட்டின் மிகப்பெரிய நகரங்கள் என்பதோடு, முக்கியமான நகரங்களாகும். இவ்விரு நகரங்கள் இடையே இரு மாநில பஸ்களும் அதிக அளவில் இயங்கும். அதிலும் கர்நாடக வோல்வோ பஸ்கள் அதிக கட்டணத்தை நிர்ணயித்து லாபத்தை அள்ளின. ஆனால், போக்குவரத்து பாதிப்பால் பயணிகள் ரயில்களை நோக்கி ஓடுவதால் இவற்றின் லாபம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.