ஜார்கண்ட்: காங். கூட்டணியின் டிரம்ப் கார்டு லாலு கட்சி! போட்டியிட்ட முக்கால்வாசி தொகுதியில் முன்னிலை
Recommended Video
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியின் வெற்றிக்கு லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி மிக முக்கிய பங்காற்றியுள்ளது.
ஜார்க்கண்டில் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய மூன்று கட்சிகளும் இணைந்து மகாகத்பந்தன் என்ற பெயரில் கூட்டணி அமைத்தன.
ஒரு தொகுதியும் கிடையாது
கடந்த 2014ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின்போது பாஜக வெற்றி பெற்று முதல்வர் ரகுபர் தாஸ் தலைமையில் ஆட்சி அமைத்தது. அந்த தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் எந்த ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனால் இந்தமுறை நிலைமையே வேறு.
5 தொகுதிகளில் ஆர்ஜேடி முன்னிலை
ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு இந்த கூட்டணியில் 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் ஐந்து தொகுதிகளில் அந்த கட்சி முன்னிலை பெற்று அசத்தியுள்ளது. 5 தொகுதிகள் தான் என்ற போதிலும் கூட ஜார்கண்ட் என்பது குறைந்த சட்டசபை தொகுதிகளைக் கொண்ட ஒரு மாநிலம் என்பதால் இந்த எண்ணிக்கை காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கப்போவதில், முக்கிய பங்காற்றுகிறது.
லாலு இமேஜ்
பீகாரை ஒட்டியுள்ள ஜார்கண்ட் மாநில பகுதிகளில் உள்ள தொகுதிகளில் ஐக்கிய ஜனதாதளம் இந்த முன்னிலை பெற்றுள்ளது. இதன் மூலம் லாலு பிரசாத் யாதவின் இமேஜ் மக்கள் மத்தியில் விழுந்துவிடவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
பிரச்சாரங்கள்
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவர் ஹேமந்த் சோரன் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது லாலு பிரசாத் யாதவ் மீது பொய் வழக்குகளைப் போட்டு பாஜக அவரை மோசமாக நடத்தி வருகிறது, ஒரு தீவிரவாதி போல அவரை நடத்துகிறது என்று சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இது மக்கள் மத்தியில் எடுபட்டிருக்கிறது என்பதற்கு இந்த முடிவுகள் ஒரு உதாரணம். இந்தக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 31 தொகுதிகளிலும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 43 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.