உ.பி இடைத்தேர்தலில் மந்தமான வாக்குப்பதிவு.. கோராக்பூரில் 36%, பஹல்பூரில் 26.6%
உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோராக்பூர், பஹல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தற்போது நடைபெற்று வருகிறது.
லக்னோ: உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோராக்பூர், பஹல்பூர் ஆகிய லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது.
உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற காரணத்தால் அவர் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் கோராக்பூர் தொகுதி காலியானது,. அதேபோல் கேசவ்பிரசாத் மவுரியா துணை முதல்வராக பதவியேற்றத்தால் பஹல்பூர் நாடாளுமன்ற தொகுதி காலியானது.
இந்த இரண்டு தொகுதிகளுக்கும்தான் இப்போது தேர்தல் நடக்கிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இன்னும் சில மணி நேரத்தில் முடிந்துவிடும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
இதில் பாஜக, காங்கிரஸ் தனித்து போட்டியிடுகிறது. சமாஜ் வாதி கட்சிக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு அளித்துள்ளது. இதனால் தேர்தல் மும்முனை போட்டியாகி இருக்கிறது.
இதற்காக கோராக்பூரில் 2141 வாக்குசாவடிகளும், பஹல்பூரில் 2059 வாக்குசாவடிகளும் வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த தேர்தல் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சியை மக்கள் ஏற்றுக் கொண்டார்களா என்பதை வெளிப்படுத்தும் என்பதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
காலையில் இருந்து மதியம் வரை வாக்குப்பதிவு மிக மிக மந்தமாக இருந்தது. மதியத்திற்கு பிறகு வாக்களிக்க அதிக நபர்கள் வந்தனர்.
3 மணி வரை கோராக்பூரில் 36 சதவிகிதம் வாக்கு பதிவாகி இருக்கிறது. பஹல்பூரில் 26.6 சதவிகிதம் வாக்கு பதிவாகி இருக்கிறது.