பீகாரில் 19-ந் தேதி நிதிஷ்- லாலு ஒரே மேடையில் பிரசாரம்?
பாட்னா: பீகார் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு கால் நூற்றாண்டு காலம் எலியும் பூனையுமாக இருந்த ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமாரும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவும் ஒரே மேடையில் வரும் 19-ந் தேதி பிரசாரம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இடைத்தேர்தல்
பீகார் மாநிலத்தில் 10 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 21ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரியா ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன.

3 கட்சி கூட்டணி
இம் மூன்று கட்சிகளுக்குள் தொகுதி பங்கீடு தொடர்பான ஒப்பந்தம் ஏற்பட்டது. மொத்தமுள்ள 10 தொகுதிகளில் தலா நான்கில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளமும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சி இரு இடங்களில் போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இஃப்தாரில் சரத்யாதவ், லாலு
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா அளித்த இஃப்தார் விருந்தில் ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவும், ராஷ்டிரிய ஜனதா தளத்தின் லாலுவும் கலந்துகொண்டனர்.

ஒரே மேடையில் நிதிஷ்-லாலு
இதனிடையே இடைதேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்து வரும் நிலையில் லாலுவும், நிதிஷும் ஒரே மேடையில் தோன்றுவார்கள் என்று கூறப்பட்டது. இது இரு கட்சிகளின் தொண்டர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

19-ந் தேதி பிரசாரம்?
வரும் 19ந் தேதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் கடைசி நாள். அன்றைய தினம் நிதிஷூம் லாலுவும் ஒரே மேடையில் தோன்றி தங்கள் கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவரும் கலந்துகொள்வார் என்கின்றன பீகார் தகவல்கள்












Click it and Unblock the Notifications