உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகளுக்கு மனநல பரிசோதனை.. ஹைகோர்ட் நீதிபதி கர்ணன் பதிலடி உத்தரவு
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 7 பேருக்குத்தான் மன நல பரிசோதனை செய்ய வேண்டும். எய்ம்ஸ் மன நல மருத்துவர்கள் கொண்ட குழு இந்த சோதனை நடத்த வேண்டும் என்று நீதிபதி கர்ணன் கூறியுள்ளார்.
கொல்கத்தா: சுப்ரீம் கோர்ட்டில் உள்ள 7 நீதிபதிகளுக்கு மன நல பரிசோதனை செய்ய வேண்டும் என கொல்கத்தா ஹைகோர்ட் நீதிபதி கர்ணன் அதிரடியாக இன்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார்.
நீதிபதிகளுக்கு எதிராக ஊழல் புகார் கூறியதற்காக உச்சநீதிமன்றத்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு உள்ளாகியுள்ளவர் கொல்கத்தா ஹைகோர்ட் நீதிபதியான கர்ணன்.

இந்த நிலையில் கர்ணனுக்கு மனநல பரிசோதனை செய்ய சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும், மன நல பரிசோதனை முடிவை வரும் 8ம் தேதிக்குள் தாக்கல் செய்யவும் இன்று பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு பதிலடி நடவடிக்கை எடுத்துள்ளார் கர்ணன். அவர் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 7 பேருக்குத்தான் மன நல பரிசோதனை செய்ய வேண்டும். எய்ம்ஸ் மன நல மருத்துவர்கள் கொண்ட குழு இந்த சோதனை நடத்த வேண்டும். மேலும் வரும் 5 ம் தேதி எனது கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என உத்தரவில் கூறியுள்ளார். மேலும் இந்த உத்தரவை வன் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கிறேன் என்றும் நீதிபதி கர்ணன் கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழ் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் கர்ணன் கூறுகையில், "இன்று சுப்ரீம்கோர்ட்டால், பாஸ் செய்யப்பட்டுள்ள ஆர்டரை மனநலம் பாதிக்கப்பட்டவர்களால்தான் செய்ய முடியும். எனவே அவர்களுக்குத்தான் மனநல சிகிச்சை தேவைப்படுகிறது. வன்கொடுமை சட்டத்தின்கீழ் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மீது விசாரணை நடத்தி வருகிறேன். அதனால் மூளை குளப்பத்திலுள்ள அவர்கள் இப்படி ஒரு ஆர்டர் போட்டுள்ளனர்" என்றார் கர்ணன்.












Click it and Unblock the Notifications