கட்டாயமாகப்போகிறதா ஆதார் அட்டை? புதிய சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லி: ஆதார் அட்டைக்கு சட்ட அந்தஸ்து வழங்க வகை செய்யும் புதிய மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா அடுத்த சில நாள்களில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆதார் அட்டைக்கு சட்ட அந்தஸ்து வழங்கும் நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக பட்ஜெட் உரையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

அரசு அளிக்கும் அனைத்துப் பலன்களும் அதற்கு தகுதியானவர்களுக்கு சென்று சேர்வதை உறுதி செய்யும் வகையில் ஆதார் அட்டைக்கு சட்ட அந்தஸ்து வழங்குவது இதன் நோக்கம்.
இதுவரை 98 கோடி பேருக்கு ஆதார் அட்டைகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. குறிப்பாக, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் பெறும் 16.5 கோடி பயனாளிகளில் 11.19 கோடி பேரின் கணக்குகள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், மானியங்கள், அரசு சேவைகள் உள்ளிட்ட அனைத்தையும் ஆதார் அட்டை மூலம் செயல்படுத்தும் வகையில், அதற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. அதேநேரம் உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக, ஆதார் அட்டையை கட்டாயப்படுத்த முடியாது என்று கூறப்படுகிறது.
ஆதாருக்கு சட்ட அங்கீகாரம் தரும் வகையில், நடப்பு கூட்டத்தொடரிலேயே சட்டம் நிறைவேற்றப்படும் என ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒருவேளை அந்த சட்டத்தில், ஆதார் அட்டையை அனைத்து சேவைகளுக்கும் கட்டாயமாக்கும் ஷரத்து இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை., உரத்திற்கான மானியமும், நேரடியாக வங்கிக்கணக்கிலே வழங்கப்பட ஆரம்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications