வந்துட்டார் மன்மோகன்சிங்... 'முட்டாள்தனமான' அவசர சட்டம் என்ன ஆகும்?

குற்ற வழக்குகளில் எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்களை பதவி பறிப்பில் இருந்து காப்பாற்ற மத்திய அரசு அவசர சட்டம் இயற்றியது. அதை ஜனாதிபதியின் ஒப்புதலுக்கும் அனுப்பியது. ஆனால் அதற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து பாரதிய ஜனதா தலைவர்கள் மனு கொடுத்தனர்.
அவசர சட்டம் தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்குள்ளும் அதிருப்தி ஏற்பட்டது. கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி, அவசர சட்டம் முட்டாள்தனம். அதை கிழித்தெறிய வேண்டும். அவசர சட்டம் கொண்டு வந்த அரசு நடவடிக்கை தவறானது என பகிரங்கமாக விமர்சித்தார்.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபை கூட்டத்துக்கு சென்றிருந்த பிரதமர் மன்மோகன்சிங் நாடு திரும்பியுள்ளார். இந்நிலையில் மத்திய அரசின் அவசர சட்டம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய அமைச்சரவையோ அவசர சட்டத்துக்கு ஆதரவாக உள்ளது. அவசர சட்டம் சரியானது என்பதை நியாயப்படுத்துகிறது. இதனால் ஜனாதிபதியிடம் இருந்து அவசர சட்டத்தை திரும்பப்பெற மத்திய அமைச்சரவை முடிவு எடுக்குமா என்ற சந்தேகம் எழுந்திருந்தது.
மேலும் அவசர சட்டம் தொடர்பாக ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டு, நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ள அறிக்கை வரும் வரை காத்திருப்பது குறித்தும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் எனவும் தெரிகிறது.
இருப்பினும் ராகுல் காந்தியின் கடுமையான விமர்சனத்தின் தாக்கம் இன்று மாலை நடைபெற இருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் எதிரொலிக்கலாம். அனேகமாக அவசர சட்டத்தை மத்திய அமைச்சரவை திரும்பப் பெறக் கூடிய சாத்தியங்கள் அதிகம் இருக்கிறது என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications