ஜெ., ரூ.100 கோடி அபராதம் : கர்நாடகா அரசின் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
ஜெயலலிதாவிற்கு சொத்துக்குவிப்பு வழக்கிற்காக அபராதமாக விதிக்கப்பட்ட ரூ.100 கோடியை எப்படி வசூலிப்பது என்று கேட்டு கர்நாடகா அரசு தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி: வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவித்த வழக்கில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு விதிக்கப்பட்ட ரூ. 100 கோடி அபராதத்தை எப்படி வசூலிப்பது என்பது பற்றி உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நீதிபதி பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் அடங்கிய அமர்வு இன்று ஆலோசனை நடத்தி சீராய்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்துள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் பிப்ரவரி மாதம் 14-ந் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதில், ஜெயலலிதா இறந்துவிட்ட காரணத்தால் அவரை வழக்கிலிருந்து விடுவித்தது. ஆனால், ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 100 கோடி ரூபாய் அபராதத் தொகையை உறுதி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
அதே நேரத்தில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவருக்கும், சிறப்பு நீதிமன்றம் நான்காண்டு சிறை தண்டனை அளித்து பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தது. அவர்களுக்கு விதிக்கப்பட்ட தலா ரூ10 கோடி அபராதத்தையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
அபராதம் வசூலிக்க முடியுமா?
உச்சநீதிமன்றத் தீர்ப்பை கூர்ந்து ஆய்வு செய்தால் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை வசூலிக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. காரணம், ஜெயலலிதா மரணமடைந்து விட்டதால் அவர் மீதான வழக்கு கைவிடப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இதை வைத்து ஒரு தரப்பு, அபராதத்தை வசூலிக்க முடியாது என்று கூறி வருகிறது.
கர்நாடகா சீராய்வு மனு
இந்நிலையில், கர்நாடக அரசு மார்ச் 21-ந் தேதி சீராய்வு மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் ஒருவர் இறந்துவிட்ட காரணத்தால், அவர் மீதுள்ள குற்றச்சாட்டு முடிவுக்கு வந்துவிட்டதாகக் கூற முடியாது. இந்த வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பிறகுதான் ஜெயலலிதா இறந்தார். சசிகலா, ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு, 2016ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
ரூ. 100 கோடி அபராதம்
ஆனால் ஜெயலலிதா இறந்தது டிசம்பர் 5ஆம் தேதிதான். அதனால், வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பிறகு, ஒருவர் இறந்துவிட்டால், அவர் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் முடிவுக்கு வந்த்தாகக் கூற முடியாது. அதனால், எப்போது உச்சநீதிமன்றம் சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை உறுதி செய்ததோ அப்போது ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டதாக அறிவிக்க வேண்டும். பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, அவருக்கு விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை, அவரது சொத்துக்களை விற்று பறிமுதல் செய்ய வேண்டும் என கர்நாடக அரசின் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டது.
சீராய்வு மனு தள்ளுபடி
இந்த மனு, ஏப்ரல் 5ஆம் தேதி நீதிபதிகளின் அறையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என்று தகவல் வெளியானது. அதன்படி நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் அமித்வா ராவ் ஆகியோர் இன்று பிற்பகல் இந்த மனு குறித்து ஆலோசனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் சீராய்வு மனு குறித்து தங்களின் அறையில் ஆலோசனை நடத்திய நீதிபதிகள், கர்நாடக அரசின் சீராய்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று கூறி தள்ளுபடி செய்து விட்டனர்.