தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்க முழுமையாக தடை விதிக்க முடியாது: சுப்ரீம் கோர்ட் திட்டவட்டம்
டெல்லி: தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பதற்கு முழுமையாக தடை விதிக்க உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது.
டெல்லியைச் சேர்ந்த 6 மாத குழந்தைகளான அர்ஜுன் கோயல், அவுரவ் பண்டாரி மற்றும் 14 மாத குழந்தையான ஜோயா ராவ் பாசின் ஆகியோர் சார்பில் அவர்களது பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

அதில், தீபாவளி, தசரா பண்டிகைகளின்போது அதிக அளவில் பட்டாசு வெடிக்கப்படுகிறது. இதன்மூலம் ஏற்படும் ஒலி மாசு, சுற்றுச்சூழல் மாசு பல்வேறு நோய்களுக்கு காரணமாக அமைகிறது. தீபாவளி பண்டிகையின்போது, மாசு ஏற்படாமல் தடுக்க பட்டாசு தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்களுக்கு எந்த விதிமுறைகளும் வகுக்கப்படவில்லை.
அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-ன் கீழ், சுத்தமான, சுகாதாரமான சூழலில் வளர்வது எங்களது அடிப்படை உரிமை. சுகாதாரமான காற்று எங்களது எனவே, அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகள் விற்க உரிமம் வழங்கும் அரசுக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர்.
இது தொடர்பான வழக்கு இன்று அவசர வழக்காக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
தடை விதிக்க முடியாது
அப்போது நீதிபதிகள், தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கு முழுமையாக தடை விதிக்க முடியாது. இருப்பினும், கடந்த 2005-ம் ஆண்டு உத்தரவுப்படி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசுகள் வெடிக்க தடை நீடிக்கும்.
சாமான்ய மனிதரின் மத உணர்வுகளில் தலையிடுவது மிகவும் ஆபத்தானது. பட்டாசு வெடிக்கக்கூடாது எனத் தடை விதித்தால், அது என் உரிமை என எதிர்ப்புக் குரல் எழுப்புவார்கள். அத்தகைய சூழல் உருவானால் பெரும் குழப்பம் ஏற்படும் என்றார்.
ஒரே இடத்தில் எப்படி பட்டாசு வெடிக்க முடியும்?
அப்போது குறுக்கிட்ட மனுதாரர் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, பட்டாசு வெடிப்பதற்கான நேரத்தில் மாற்றம் செய்ய வேண்டும். பொதுவாக ஓர் இடம் தேர்வு செய்து அங்கு அனைவரும் பட்டாசுகளை வெடிக்கலாம் என உத்தரவிடலாம் எனக் கோரிக்கை விடுத்தார்.
அதற்கு தலைமை நீதிபதி தத்து, அது நடைமுறை சாத்தியமற்றது. பட்டாசு வெடிக்க வேண்டுமானால் அனைவரும் நேரு மைதானத்துக்கு வாருங்கள் என உத்தரவிடமுடியாது என்றார்.
சுப்ரீம் கோர்ட் கண்டனம்
மேலும் பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் ஒலி மாசு, உடல்நல சீர்கேடுகள் குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு போதிய விளம்பரம் செய்யவில்லை என உச்ச நீதிமன்றம் தனது கண்டனத்தை தெரிவித்தது.












Click it and Unblock the Notifications