மோடி, முலாயம்.. 2 தொகுதிகளில் போட்டியிட்ட பெருந்தலைகளால் வருது இடைத்தேர்தல்
டெல்லி: தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெருந்தலைகளால் சில மக்களவை மற்றும் சட்டசபை தொகுதிகளுக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயம் தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட்டுள்ளது. எம்.எல்.ஏக்களாக இருந்தவர்கள் எம்பிக்களாகியதும், இரு நாடாளுமன்ற தொகுதிகளிலும் ஒரே நபர் வெற்றி பெற்றதும்தான் இந்த இடைத்தேர்தல்களுக்கு காரணமாகப்போகிறது.

15வது பிரதமர்
பாஜகவின் பிரதமர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திரமோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தின் வதோதராவில் இருந்தும், உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் இருந்தும் போட்டியிட்டார். இரண்டிலும் அமோக வெற்றி பெற்றார். ஆனால் இரண்டில் ஒரு தொகுதியை அவர் விட்டுக்கொடுத்தாக வேண்டியுள்ளது. அநேகமாக வதோதரா தொகுதியை மோடி விட்டுக்கொடுக்க கூடும் என்பதால் அங்கு தேர்தல் நடத்தப்பட வேண்டியது அவசியமாகிறது. குஜராத்தின் மணிப்பூர் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏவாக மோடி பதவி வகித்ததால் அந்த சட்டசபை தொகுதிக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

முலாயம் சிங்
உத்தரபிரதேசத்தின் மணிப்புரி, அசம்கார் ஆகிய இருதொகுதிகளிலும் சமாஜ்வாதி தலைவர் முலாயம்சிங் யாதவ் வெற்றி பெற்றுள்ளார். இதில் அவர் எந்த தொகுதியை விட்டுக்கொடுக்கிறாரோ அங்கு இடைத் தேர்தல் நடத்தப்படும்.

முதல் முதல்வரும் அப்படித்தான்
உதயமாக உள்ள தெலுங்கானா மாநிலத்தின் முதலாவது முதல்வராக பதவியேற்க உள்ள சந்திரசேகரராவ், எம்.எல்.ஏவாக பதவி வகிக்க வேண்டியுள்ளதால், மேடக் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தியாகம் செய்ய வேண்டிவரும். எனவே அங்கும் தேர்தல் கேரண்டி.

எடியூரப்பாவால் இடைத்தேர்தல்
கர்நாடகாவின் பாஜக முக்கிய புள்ளி, எடியூரப்பா, ஷிகாரிபுரா தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த நிலையில், ஷிமோகா மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். எனவே எம்.எல்.ஏ பதவியை அவர் ராஜினாமா செய்துவிட்டார். ஷிகாரிபுரா சட்டசபை தொகுதி இடைத் தேர்தலை சந்திக்க உள்ளது.

டெல்லியிலும் அதேதான்
டெல்லி சட்டசபை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஹர்ஷவர்த்தன், இப்போது சாந்தினி சவுக் நாடாளுமன்ற தொகுதி எம்.பி. எனவே அவர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். சட்டப்படி ஒரு தொகுதியில் உறுப்பினர் இல்லாவிட்டால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதால் இத்தொகுதிகள் அனைத்துக்கும் இன்னும் ஆறு மாதங்களுக்குள் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெறலாம்.












Click it and Unblock the Notifications