காவிரி மேலாண்மை வாரியம்: மோடியை நாளை சந்தித்து மனு அளிக்க கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு
பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள கர்நாடக அரசு, இதுதொடர்பாக இன்று அனைத்துக் கட்சி குழுவுடன் ஆலோசனை நடத்தியது. நாளை பிரதமர் மோடியிடம் கர்நாடகா சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்படுகிறது.

கடந்த மூன்றாம் தேதி டெல்லி சென்ற தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து தமிழக நலன் சார்ந்த ஒரு கோரிக்கை மனுவை அளித்தார். அதில், காவிரி நீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகியுள்ள நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முக்கியமானது. இதை பரிசீலித்த பிரதமர், அடுத்த அமைச்சரவை கூட்டத்திலேயே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒப்புதல் பெற நடவடிக்கை எடுத்ததாக கூறப்பட்டது. அமைச்சரவையில் விவாதிக்கப்படும் விவகாரங்கள் குறித்து மத்திய அமைச்சர்களுக்கு அனுப்பப்படும் வரைவில் இத்தகவல் இடம் பெற்றுள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி கசிந்தது.
இந்த தகவல் கர்நாடக அரசுக்கும் கிடைத்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அம்மாநில முதல்வர் சித்தராமையா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும்போது மேலாண்மை வாரியம் அமைக்க கூடாது என்று சித்தராமையா தெரிவித்தார். இதுகுறித்து ஆலோசிக்க ஜூன் 9ம்தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்புவிடுத்துள்ளதாகவும் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதன்படி கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. முதல்வர் தலைமையில் விதான சவுதாவில் நடந்த இக்கூட்டத்தில் பாஜக, மஜத, காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த சட்டப்பேரவை மற்றும் மேலவை கட்சி தலைவர்கள் பங்கேற்றார்கள். மாநில அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார், தலைமை செயலாளர் கவுசிக் முகர்ஜி, நீர்வள அமைச்சர் எம்.பி.பாட்டீல், முன்னாள் நீர்வள அமைச்சர் பொம்மை, மண்டியாவை சேர்ந்தவரும் வீட்டுவசதி அமைச்சருமான அம்பரீஷ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
மோடியிடம் வலியுறுத்த வேண்டிய அம்சங்கள் குறித்து இதில் இறுதிவடிவம் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி குழு இன்று இரவு டெல்லி செல்கிறது. நாளை காலை கர்நாடகாவை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் சதானந்தகவுடா, அனந்தகுமார், சித்தேஸ்வர் ஆகியோருடனும், எம்.பிக்களுடனும் டெல்லி கர்நாடக பவனில் கலந்தாலோசனை நடத்தும் சித்தராமையா, பிற்பகலில் அனைத்துக் கட்சி குழுவுடன் மோடியை சந்தித்து கர்நாடக நிலைப்பாட்டை பற்றி எடுத்துக்கூறுவார்.












Click it and Unblock the Notifications