சுப்ரீம் கோர்ட் சுளீர்.. பணிந்தது கர்நாடகா.. காவிரியில் கூடுதல் நீர் திறப்பு - சித்தராமையா
பெங்களூரு: காவிரி பிரச்சனை குறித்து விவாதிக்க கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் பெங்களூருவில் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமைய்யா, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படும் எனத் தெரிவித்தார்.
காவிரியில் 50 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிடக் கோரி தமிழகம் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழகத்திற்கு விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு கர்நாடகம் தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் நேற்று மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று மாலை நடைபெற இருப்பதாக கூறினார். அக்கூட்டத்தில் உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்றார்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதில் இருந்தே கர்நாடகாவில் கடந்த 2 நாட்களாக பதற்றமான நிலை நீடித்து வருகிறது. பேருந்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சித்தராமைய்யா தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் சட்டப்பேரவை மற்றும் சட்டமேலவையின் அனைத்துக்கட்சித் தலைவர்கள், கர்நாடகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், கர்நாடக அமைச்சர்கள், காவிரி நதிநீர் படுகை மாவட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சித்தராமையா கூறியதாவது: கர்நாடக மாநிலத்தில் இந்தாண்டு மழை குறைவாகவே பெய்துள்ளது. மழை இல்லாததால்,நீர் நிலைகள் வறண்டு போய் உள்ளன.எனவே இதனை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல சீராய்வு மனு ஒன்றை தாக்கல் செய்ய இருக்கிறோம். கர்நாடகா அணைகளில் நீர் இருப்பு கண்டறிய காவிரி கண்காணிப்பு குழு இங்கு வருகை தந்து பார்வையிட வேண்டும். உச்சநீதிமன்ற உத்தரவை கர்நாடக அரசு மதிக்கும்.
விவசாயத்துக்கும், பெங்களூரு மக்களின் குடிநீர் தேவைக்கும் தண்ணீர் வழங்க வேண்டியுள்ளது. இதனை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல திருத்தப்பட்ட சீராய்வு மனு ஒன்றை நாளை தாக்கல் செய்ய இருக்கிறோம். இருப்பினும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இன்று இரவு காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் எனத் தெரிவித்தார்.
முன்னதாக தண்ணீர் திறந்து விட எதிர்ப்புத் தெரிவித்து மாண்டியா மாவட்டத்தில் இன்று முழு கடை அடைப்பு போராட்டம் நடந்தது.
Bengaluru: All party meeting to discuss Cauvery river water issue, underway pic.twitter.com/wMX5ex25sH
— ANI (@ANI_news) September 6, 2016












Click it and Unblock the Notifications