தமிழர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: கர்நாடக அமைச்சரிடம் பெங்களூர் தமிழ்ச்சங்கம் மனு
பெங்களூர்: காவிரி விவகாரத்தால் போராட்டம் நடந்து வரும் நிலையில் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரி பெங்களூர் தமிழ்ச் சங்க நிர்வாகிகள் கர்நாடக மாநில அமைச்சரிடம் மனு அளித்துள்ளனர்.
தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து கர்நாடக மாநிலத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. தமிழ் படங்கள் திரையிடப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வரும் 9ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடக்க உள்ளது.
இந்நிலையில் பெங்களூர் தமிழ்ச்சங்க தலைவர் கோ.தாமோதரன், காங்கிரஸ் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பிரகாசம் உள்ளிட்டோர் காவல்துறை அமைச்சர் பரமேஸ்வரை செவ்வாய்க்கிழமை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,
ஒவ்வொரு ஆண்டும் மழை பொய்த்து போகும்போது கர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே காவிரி பிரச்சினை ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. மாநிலங்களுக்கு இடையேயான பிரச்சினையில் அரசியலை நுழைக்காமல் மத்திய அரசு சரியான நடவடிக்கை மேற்கொண்டு இரு மாநிலத்திலும் அனைத்து தரப்பு மக்களும் அமைதியாக வாழ வகை செய்ய வேண்டும். கர்நாடக அரசு இங்குள்ள தமிழர்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும்.
காவிரி பிரச்சினையில் ஆதாயம் தேட விரும்பும் தீய சக்திகள் குழப்பத்தை ஏற்படுத்தி தமிழர்களுக்கு தொல்லை தர முயற்சிப்பதை கர்நாடக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். தமிழர்கள் அதிகமாக வசிக்கும் பெங்களூரு, மைசூரு, மண்டியா, கோலார், சாம்ராஜ்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் கூறுகையில்,
மாநிலத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்குமாறு போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளேன். கர்நாடகாவில் கன்னடர்கள், தமிழர்கள் அனைவரும் சமமே என்றார்.












Click it and Unblock the Notifications