6000 கன அடி காவிரி நீர் திறப்பு விவகாரம் - கர்நாடகாவின் சீராய்வு மனு தள்ளுபடி
காவிரி நீர் திறப்பு விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு தொடர்ந்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
டெல்லி: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு 6000 கனஅடி நீர் திறக்க, பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி கர்நாடக அரசு சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் பிறப்பித்திருந்த உத்தரவையும் கர்நாடகம் எதிர்த்திருந்தது. இந்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு மனு தாக்கல் செய்தது
கர்நாடக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, லலித் ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த இடைக்கால மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் அளவுக்கு ஏற்றதல்ல என்று கூறி, கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவை மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் மதிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.
தொடர்ந்து, கர்நாடகாவின் மனுவை நிராகரித்த நீதிபதிகள், செப்டம்பர் 20 ஆம் தேதி வரை நாள்தோறும் 12 ஆயிரம் கன அடி நீரை திறக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதற்கிடையே காவிரி மேற்பார்வைக்குழு நேற்று பிறப்பித்த உத்தரவில் தமிழகத்திற்கு மேலும் 10 நாட்களுக்கு அதாவது செப்டம்பர் 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தினமும் 3000 கன அடி தண்ணீர் திறக்கவேண்டும் என தெரிவித்தனர். காவிரி மேற்பார்வைக்குழுவின் தீர்ப்பின்படி 3000 கன அடி தண்ணீர் போதாது என்றும், 50 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் முறையீடு செய்தது.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், கடந்த ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி வரை தமிழகத்திற்கு தினமும் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், நான்கு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கர்நாடக அரசு தண்ணீர் திறக்கவில்லை என தமிழகம் முறையிட்டது. எனவே தண்ணீர் திறந்து விடுடாறு கர்நாடகத்திற்கு உத்தரவிட தமிழக அரசு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர்.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்றம் உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. தமிழகத்தில் கடும் வறட்சியால் பயிர் கருகியதுடன் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாக தமிழக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்திற்கு செப்டம்பர் 20 முதல் 30ம் தேதி வரை 6000 கனஅடி நீர் திறக்க, பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி கர்நாடக அரசு சீராய்வு மனுவை தாக்கல் செய்தது. அந்த மனுவில் 6,000 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்ற உத்தரவில் திருத்தம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மனுவில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்க கடந்த 20ம் தேதி பிறப்பிக்கப்பட்ட உச்சநீதிமன்ற உத்தரவை செயல்படுத்த இயலாது என்று கூறியுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் தற்போது கர்நாடக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.