தமிழ்நாட்டுக்கு காவிரி நீர்- கர்நாடகா மண்டியாவில் நாளை 'பந்த்'- முதல்வர் ஸ்டாலின் படம் கிழிப்பு!
மண்டியா: காவிரியிலிருந்து தமிழ்நாட்டுக்கு 5,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவுக்கு அம்மாநிலத்தில் உக்கிரமான எதிர்ப்பு தொடருகிறது. மண்டியா மாவட்டத்தில் நாளை முழு அடைப்புப் போராட்டம் நடத்த கன்னட விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
காவிரியில் 24,000 கன அடி நீரை திறக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் கோரிக்கை. இதனை வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது. முன்னதாக காவிரி மேலாண்மை ஆணையம் வெறும் 5,000 கன அடி நீரை மட்டும் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட உத்தரவிட்டது. இதனையும் கர்நாடகா ஏற்காமல் சொற்ப நீரைத்தான் திறந்துவிட்டிருந்தது.

உச்சநீதிமன்றம் உத்தரவு: தமிழ்நாடு அரசின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வினாடிக்கு 5,000 கன அடி நீரை காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறந்துவிட நேற்று உத்தரவிட்டது. காவிரி மேலாண்மையத்தின் உத்தரவுக்கு தடை கோரிய கர்நாடகாவின் மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது.
கர்நாடகாவில் வெடித்த போராட்டம்: தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை திறந்துவிடவே கூடாது என ஏற்கனவே கன்னட விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு கர்நாடகாவில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடகாவின் மண்டியா, சாம்ராஜ் நகர், மைசூர், பெங்களூர் நகரங்களில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக போராட்டங்கள் தீவிரப்படுத்தப்பட்டன.
மண்டியா: மண்டியா விஸ்வரேய்யா சிலை முன்பாக கன்னட விவசாய அமைப்பினர் தரையில் படுத்து உருண்டு போராட்டம் நடத்தினர். அப்போது எங்களுக்கு விஷத்தை கொடுத்து விடுஙக்ள் என முழக்கம் எழுப்பினர்.
பாண்டவபுரா: மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் மேலக்கோட்டை சுயேட்சை எம்.எல்.ஏ. தர்ஷண் புட்டண்ணா தலைமையில் கன்னட விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர்.
மைசூரில் முதல்வர் ஸ்டாலின் படம் கிழிப்பு: மைசூர் பசவேஸ்வரா சர்க்கிளில் கர்நாடகா ராஜ்ய ரைத்தா சங்கம், ஹசிரு சேனா இயக்கம் ஆகியவை சார்பாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் உருவப் படம் கிழிக்கப்பட்டது. கர்நாடகா சேனா படையினர் மைசூரில் துடைப்பத்தால் சாலையில் அடித்தபடி போராட்டத்தை மேற்கொண்டனர். மைசூர் காடா நீர்ப்பாசனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப்பட்டது.
சாம்ராஜ்நகர் : சாம்ராஜ்நகர் புவனேஸ்வரி சர்க்கிளிலும் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டத்தின் போது டயர்கள் கொளுத்தப்பட்டன. பானைகள் நடுவீதிகளில் உடைக்கப்பட்டன.

பெங்களூர் முற்றுகை: பெங்களூரில் கன்னட ரக்ஷன வேதிகே இயக்கத்தின் நாராயண கவுடா தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. பெங்களூர் விதான் சதா முற்றுகைப் போராட்டத்தையும் கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் நடத்தினர்.
மண்டியா 'பந்த்' : காவிரியில் தமிழ்நாட்டுக்கு நீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து மண்டியா மாவட்டம் முழுவதும் நாளை முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கன்னட விவசாயிகள் சங்கம் இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனையடுத்து ஶ்ரீரங்கப்பட்டணா கண்ணம்பாடி கிருஷ்ணராஜ சாகர் மற்றும் மைசூர் கபினி அணைகள் ஆகியவற்றுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படுவதால் இரு மாநில எல்லைகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications