தமிழக தொழிலதிபருக்கு சொந்தமான இடத்தில் ரூ.20 கோடி ஹவாலா பணம் பறிமுதல்! சிக்குமா முக்கிய புள்ளி?
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் தலைநகர், கொல்கத்தாவில், தமிழகத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபருக்குச் சொந்தமான இடத்தில் மத்திய நேரடி வரிவிதிப்பு வாரியம் நடத்திய அதிரடி சோதனையில் சாக்கு மூட்டைகளிலும், பீரோவிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.20 கோடி ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மத்திய உளவுத்துறை அளித்த தகவலின்பேரில் இந்த சோதனை நடத்தப்பட்டது. தமிழகத்தை சேர்ந்த லாட்டரி தொழிலதிபர் ஒருவர் தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் சட்ட விரோதமாக லாட்டரி தொழிலில் ஈடுபட்டிருப்பதாகவும், அவருக்கு சொந்தமான கொல்கத்தா மற்றும் சிலிகுரி நகரங்களிலுள்ள குடோன் மற்றும் நிறுவனங்களில் ஹவாலா பணம் பதுக்கப்பட்டிருப்பதாகவும் உளவுத்துறை கொடுத்த தகவல் அடிப்படையில் இச்சோதனை நடந்தது.

கொல்கத்தா மற்றும் சிலிகுரியில் உட்பட 9 இடங்களில் நேரடி வரி விதிப்பு வாரிய அதிகாரிகள் இன்று மேற்கொண்ட அதிரடிச் சோதனையில் சுமார் ரூ.20 கோடி பணம் சிக்கியுள்ளது. சாக்கு மூட்டைகளிலும், பழைய கபோர்டுகளிலும் இப்பணம் கட்டுக்கட்டாக மறைத்து வைக்கப்பட்டிருந்தது அம்பலமாகியுள்ளது.
இந்த போலி லாட்டரி தொழிலதிபர் சுமார் ரூ.1000 கோடி மதிப்பிலான ஹவாலா மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. நிழலுலக தாதா, தாவூத் இப்ராஹிம் கும்பலுக்கும், அந்த லாட்டரி அதிபருக்கும் தொடர்புள்ளதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு பணத்தை அனுப்பி ஹவாலா மோசடியில் இக்கும்பல் ஈடுபட்டுள்ளதற்கான ஆதாரங்கள் உளவுத்துறை வசம் உள்ளன.
கொல்கத்தாவில் இவ்வளவு பெரிய ஹவாலா மோசடி அம்பலமானது இதுவே முதன்முறையாகும். இதுவரை இச்சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications