அன்புமணி மீதான ஊழல் வழக்கு: குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது ஜனவரி 5-க்கு ஒத்திவைப்பு
டெல்லி: மருத்துவ கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் பா.ம.க. எம்.பி.யுமான அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது ஜனவரி 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் சுகாதாரத்துறை அமைச்சராக அன்புமணி ராமதாஸ் பதவி வகித்தார். அப்போது இந்தூர், லக்னோவில் மருத்துவக் கல்லூரிகளுக்கு முறைகேடாக அனுமதி வழங்கினார் என்பது புகார்.

இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி அன்புமணி ராமதாஸ் உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில் அன்புமணி உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்யலாம் எனவும் சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் அன்புமணி உள்ளிட்ட 10 பேர் மீதும் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதாக இருந்தது.
ஆனால் சி.பி.ஐ. நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் அன்புமணி மனு தாக்கல் செய்தார். அதனால் குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அன்புமணியின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் இன்று இந்த வழக்கில் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதாக நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இருப்பினும் இந்த வழக்கில் தொடர்புடைய இன்டெக்ஸ் மருத்துவ கல்லூரி சார்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதனை ஏற்று அன்புமணி உள்ளிட்ட 10 பேர் மீதும் ஜனவரி 5-ந் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படும் என டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.












Click it and Unblock the Notifications