கால்நடை தீவன ஊழல் வழக்கு: லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி! தண்டனை எப்போது தெரியுமா?
ராஞ்சி: மாட்டு தீவன வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட 22 பேரில் 16 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் 6 பேர் விடுதலை செய்யப்படுவதாக சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தண்டனை விவரம் ஜன. 3ம் தேதி அறிவிக்கப்படுகிறது. இது ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பீகாரில் கடந்த 1991 முதல் 1995 வரையில் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது கால்நடை தீவனம் வாங்குவதில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது. தியோஹர் மாவட்ட அரசு கருவூலத்தில் இருந்து 89 லட்சம் ரூபாய் முறைகேடு செய்ததாக லாலு பிரசாத் உள்ளிட்ட 22 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இந்த ஊழல் வழக்கில் சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் இருந்து 37 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததற்காக 2013ம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் லாலு பிரசாத் யாதவிற்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதேபோல், இந்த வழக்கில் லாலு பிரசாத் மீது மேலும் 3 வழக்குகள் விசாரணையில் உள்ளன.
இந்த வழக்கில் ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஷிவ்பால் சிங் தீர்ப்பளித்தார். முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக லாலு பிரசாத் யாதவ் ராஞ்சி சென்றிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, 38 பேருக்கு எதிராக கடந்த 1997ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில், 11 பேர் இறந்துவிட்டனர். 3 பேர் அரசு தரப்பு சாட்சியாக மாறிய நிலையில், 2 பேர் குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டனர். இந்த வழக்கைத் தவிர, லாலு பிரசாதுக்கு எதிராக மேலும் 3 கால்நடைத் தீவன வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications