தெலுங்கானா' போராட்ட நிதி மோசடி: விஜயசாந்தி, சந்திரசேகர் ராவ் மீது வழக்கு- சிபிஐ விசாரணை
ஹைதராபாத்: தெலுங்கானா போராட்டத்துக்காக வசூலிக்கப்பட்ட நிதியை மோசடி செய்ததாக நடிகை விஜயசாந்தி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர்ராவ், அவரது மருமகன் ஹரீஷ் ராவ் ஆகியோர் மீது கூறப்படும் புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தை சேர்ந்த பாலாஜி வதேரா என்பவர் சி.பி.ஐ. நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியுள்ளதாவது:

நடிகை விஜயசாந்தி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ், அவரது மருமகன் ஹரிஷ் ராவ் எம்.எல்.ஏ. ஆகியோர் தெலுங்கானா போராட்டத்தின் போது பல கோடி ரூபாய் வசூல் செய்து மோசடியில் ஈடுபட்டனர்.
ஹைதராபாத்தில் வசிக்கும் சீமாந்திராவை சேர்ந்த சினிமா படப்பிடிப்பு குழுவினரை மிரட்டி பணம் பறித்துள்ளனர். எனவே அவர்கள் மீது சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சந்திரசேகர் ராவ் இப்படி நிதி வசூலித்து சொத்துகளை வாங்கிக் குவித்ததற்கான ஆதாரங்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
விஜயசாந்தி வரவேற்பு
சி.பி.ஐ.யின் இந்த நடவடிக்கையை நடிகை விஜயசாந்தி வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், சி.பி.ஐ.யின் இந்த நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். விசாரணை செய்தால் தான் என் மீது எந்த குற்றமும் இல்லை என்பது தெரியவரும். நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததாக இதை கருதுகிறேன் என்றார்.
மிரட்டுகிறது காங்கிரஸ்- சந்திரசேகர் ராவ்
இதேபோல் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர் சந்திரசேகரராவ் கூறுகையில், தேர்தலுக்கு முன்பு எனது கட்சியை காங்கிரசுடன் இணைப்பேன் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். நான் அதற்கு மறுத்துவிட்டதால் சி.பி.ஐ. மூலம் காங்கிரஸ் மிரட்டுகிறது. இது என்னை அடக்க காங்கிரஸ் நடத்தும் நாடகம் ஆகும். காங்கிரஸ் இதுபோல் தான் அனைவரையும் பணிய வைக்க முயலுகிறது என்றார்.












Click it and Unblock the Notifications