ஹெலிகாப்டர் பேர ஊழல்: முன்னாள் விமானப்படை தளபதி எஸ்.பி. தியாகிக்கு 4 நாள் சிபிஐ காவல்
இத்தாலி அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஊழல் வழக்கில் முன்னாள் விமானப்படை தளபதி எஸ்பி.தியாகிக்கு 4 நாள் போலீஸ் காவல் அனுமதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு நேற்று உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர முறைகேடு வழக்கில் கைதான இந்திய முன்னாள் விமானப் படைத் தளபதி எஸ்.பி.தியாகிக்கு 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்துள்ளது.
முக்கியப் பிரமுகர்கள் பயணம் செய்வதற்கான 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவது தொடர்பாக, இத்தாலியின் பின்மெக்கனிக்கா குழுமத்தின் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது. ரூ.3,600 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெற அந்த நிறுவனம் இந்தியர்களுக்கு 10 சதவீதம் கமிஷன் வழங்கியதாக புகார் எழுந்தது.

அந்த நிறுவனத்துடன் தியாகி 2004-ம் ஆண்டு பேரத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இவர் இந்திய விமானப்படை தளபதியாக கடந்த 2004- 2007ம் ஆண்டுகளில் பதவி வகித்தார்.
ஊழல் புகார் எழுந்ததை அடுத்து 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. இதுதொடர்பாக இத்தாலியில் தொடரப்பட்ட வழக்கில், லஞ்சம் வழங்கியதற்காக அந்த நிறுவனத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் 2 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேலும் லஞ்சம் வழங்கப் பட்டுள்ளதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டது. இந்த தீர்ப்பில் எஸ்.பி. தியாகியின் பெயர் பல இடங்களில் இடம் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக எஸ்.பி.தியாகி உட்பட 14 பேர் மீது சிபிஐ அமைப்பும் 21 பேர் மீது அமலாக்கத் துறையும் ஏற்கெனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தன.
தொழிலதிபர் கவுதம் கைதான் மற்றும் தியாகியின் சகோதரர்களான சஞ்சீவ், ராஜீவ் மற்றும் சந்தீப் ஆகியோரின் நிறுவனங்களுக்கு வெளிநாட்டிலிருந்து லஞ்சப்பணம் கைமாறி உள்ளதாக, கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அகஸ்டாவெஸ்ட்லேன்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி கைது செய்யப்பட்டார். முன்னாள் தளபதியுடன் ஜூலி தியாகி மற்றும் தொழிலதிபர் கவுதம் கைதானையும் சி.பி.ஐ.போலீசார் கைது செய்தனர்.
தற்போது எஸ்பி தியாகியிடம் விசாரணை நடத்துவதற்காக சிபிஐ தரப்பில் 10 நாள்கள் போலீஸ் காவல் கேட்டு டெல்லி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் 4 நாள்கள் (வரும் 14-தேதி வரை) போலீஸ் காவலில் வைத்து எஸ்பி.தியாகியை விசாரிக்க அனுமதி அளித்து நேற்று உத்தரவிட்டுள்ளது.
எஸ்பி தியாகி தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், கடந்த 2013-ம் ஆண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துவிட்டு தற்போது ரூபாய் நோட்டு விவகாரத்தை திசை திருப்பும் நோக்குடன் அவரை கைது செய்திருப்பதாக குற்றம் சுமத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட தியாகிடம் சிபிஐ போலீசார் 4 மணி நேரம் தொடர்ந்து விசாரணை நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications