2ஜி வழக்கில் தொடரும் அதிரடி: ஜாபர்சேட்டிடம் விசாரிக்க உள்துறையிடம் அனுமதி கோரியது சி.பி.ஐ.!
டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சர்ச்சைக்குரிய டெலிபோன் உரையாடல் குறித்து உளவுத்துறை முன்னாள் ஐ.ஜி. ஜாபர்சேட்டிடம் விசாரிப்பதற்கு உள்துறை அமைச்சகத்திடம் சி.பி.ஐ. அனுமதி கோரியிருப்பதாக டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி எம்.பி. உள்ளிட்டோர் மீதான வழக்குகள் டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திடீரென ஆ. ராசா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக புதிய வழக்கையும் சி.பி.ஐ. பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் புதிய திருப்பமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லியில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் டெலிபோன் உரையாடல்கள் அடங்கிய தொகுப்பை வெளியிட்டிருந்தார். அதில் ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாக இயக்குநராக இருந்த சரத்குமார், கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் ஆகியோருடன் முந்தைய திமுக ஆட்சியில் உளவுத் துறை ஐ.ஜியாக இருந்த ஜாஃபர் சேட் பேசுவது இடம்பெற்றிருப்பதாகவும் பிரசாந்த் பூஷண் கூறியிருந்தார்.
மேலும் கனிமொழியுடன் 2010-ஆம் ஆண்டு நவம்பர் 23; 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி 16; சரத்குமாருடன் 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி 13; கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனுடன் 2010-ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆகிய தேதிகளில் ஜாஃபர் சேட் பேசியதாகவும் இவை அனைத்துமே ஸ்பெக்ட்ரம் ஊழலை மறைக்க மேற்கொண்ட முயற்சிகளுக்கான ஆதாரமே என்றும் பிரசாந்த் பூஷண் தெரிவித்திருந்தார்.
இதை ஆராய்ந்த சி.பி.ஐ., கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனை விசாரணைக்கு வருமாறு வாய்மொழியாக உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் காவல்துறை அதிகாரி ஜாஃபர் சேட்டிடம் விசாரணை நடத்துவதற்காக உள்துறை அமைச்சகத்திடம் சி.பி.ஐ. அனுமதி கோரியுள்ளது.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடரும் சி.பி.ஐ.யின் தீவிர நடவடிக்கையால் தி.மு.க. அதிர்ச்சி அடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications