மோடியின் வலதுகரம் அமித்ஷாவுக்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி திடீர் 'டிரான்ஸ்பர்'
மும்பை: பிரதமர் நரேந்திர மோடியின் 'வலதுகரம்' பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் அமித்ஷா மீதான துளசிராம் பிரஜாபதி போலி என்கவுன்ட்டர் வழக்கை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு நீதிபதி ஜே.டி. உத்பத் திடீரென இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2005ஆம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் சொராபுதீன் ஷேக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய சாட்சியாக இருந்த துளசிராம் பிரஜாபதி 2006ஆம் ஆண்டு குஜராத் போலீஸால் நடத்தப்பட்ட மற்றொரு என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்.

இந்த என்கவுன்ட்டர்கள் போலியாக நடத்தப்பட்டது என்று குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் குஜராத்தின் உள்துறை அமைச்சராக பதவி வகித்த அமித் ஷா உள்ளிட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அமித் ஷா உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கடந்த மே 9ந் தேதி நீதிபதி ஜே.டி. உத்பத் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையின் போது அமித்ஷா ஆஜராகவில்லை. அத்துடன் வழக்கில் ஆஜராவதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அமித் ஷாவின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, வழக்கு விசாரணையில் ஆஜராகாமால் இருக்க எப்போதும் எந்தவித காரணமுமின்றி மனு தாக்கல் செய்து வருகிறீர்கள் என்று சாடினார். அத்துடன் வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை ஜூலை 2ந் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி உத்பத்.
இந்த நிலையில்தான் அமித் ஷா மீதான வழக்கை விசாரித்து வந்த நீதிபதி உத்பத் திடீரென நேற்று புனேவுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications