திரும்பி வந்திருங்க, பாஸ்போர்ட்டுடன் நேரில் ஆஜராகுங்க.. மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: பல்வேறு வங்கிகளில் ரூ. 9 ஆயிரம் கோடி அளவில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் தற்போது தலைமறைவாக உள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா இம்மாதம் 30ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுபான உற்பத்தி, விமானப் போக்குவரத்து என பல்வேறு துறைகளில் கொடி கட்டிப் பறந்தவர் பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா. பெங்களூரைச் சேர்ந்த இவர் தனக்குச் சொந்தமான யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தை, பிரிட்டனைச் சேர்ந்த டியாஜியோ நிறுவனத்திற்கு விற்பனை செய்தார். இதற்கென டியாஜியோ நிறுவனத்திடம் இருந்து அவர் ரூ. 515 கோடியை பெற்றார்.
ஆனால், இந்தத் தொகையை வங்கியில் இருந்து எடுப்பதில் விஜய் மல்லையாவுக்கு சிக்கல் ஏற்பட்டது.

வழக்கு...
இதற்கிடையே, தனது நிறுவனங்கள் பேரில் விஜய் மல்லையா வாங்கிய ரூ. 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை அவர் திரும்பச் செலுத்தவில்லை என அவருக்கு எதிராக வங்கிகள் கூட்டமைப்பின் மூலம் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், விஜய் மல்லையா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும்; அவரது பாஸ்போர்ட்டை முடக்க வேண்டும்' என வங்கிகள் வலியுறுத்தியிருந்தன.

வெளிநாடு தப்பினார்...
ஆனால், தனது பாஸ்போர்ட் முடக்கப்படுவதற்கு முன்னதாகவே வெளிநாடு தப்பிச் சென்றுவிட்டார் விஜய் மல்லையா. இதனை வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசே தெரிவித்தது.

சொத்துக்கள் அதிகம்...
இது தொடர்பாக மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கூறுகையில், ‘சிபிஐ அதிகாரிகள் மார்ச் 2ம் தேதியே விஜய் மல்லையா வெளிநாடு சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர். பல்வேறு வங்கிகளில் 9,000 கோடிரூபாய் கடன் பெற்றுள்ள அவர் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி கடன் தொகையை திருப்பிச் செலுத்தாமல் இருந்துள்ளார். அவருக்கு எதிராக பெங்களூரு கோவா நகரங்களில் உள்ள கடன் வசூல் தீர்ப்பாயங்களில் வழக்குகள் விசாரணையில் உள்ளன. தற்போது விஜய் மல்லையாவுக்கு வெளிநாடுகளிலும் சொத்துக்கள் உள்ளன. அவை இந்த கடன் தொகையை விட அதிக மதிப்பு கொண்டவை' என்றார்.

பாஸ்போர்ட்டோடு ஆஜராக வேண்டும்...
அதனைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘வங்கிகள் தாக்கல் செய்த மனுவுக்கு விஜய் மல்லையா இன்னும் இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும். மார்ச் 30ம் தேதிக்குள் அவர் தனது பாஸ்போர்ட்டோடு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டனர்.

இமெயில் மூலம்...
மேலும், தற்போது விஜய் மல்லையா பிரிட்டனில் இருப்பதாகக் கூறப்படுவதால் இந்த நோட்டீசை லண்டனில் உள்ள இந்திய தூதரகம் மூலமாகவோ ராஜ்யசபா எம்.பி.,யான அவரது அலுவல் ரீதியிலான 'இ - மெயில்' முகவரி மூலமாகவோ அனுப்ப வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

வங்கிகளின் பட்டியல்....
பாரத ஸ்டேட் வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆப் பரோடா, கார்ப்பரேஷன் வங்கி, பெடரல் வங்கி, ஐ.டி.பி.ஐ., வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஜம்மு - காஷ்மீர் வங்கி, பஞ்சாப் மற்றும் சிந்த் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரு, யூகோ வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட இந்த வங்கிகள் தான் விஜய் மல்லையாவிடம் அளவுக்கதிகமான பணத்தைக் கடனாக அளித்து விட்டு தற்போது அதனைத் திரும்பப் பெற்றுத்தரும்படி உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளன.

முதலிடத்தில் எஸ்பிஐ...
இந்தப்பட்டியலிலேயே அதிகமாக கடன் அளித்துள்ளது ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தான். இது விஜய் மல்லையாவிற்கு ரூ.1,600 கோடி அளித்துள்ளது. இதேபோல் ஐடிபிஐ வங்கியிடமும் கடந்த 2009ம் ஆண்டு கிங்பிஷர் விமான நிறுவனத்தின் பேரில் ரூ. 950 கோடி கடனாகப் பெற்றுள்ளார் விஜய் மல்லையா.

கருப்பு ஆடுகள்...
இவ்வளவு பெரிய தொகையை விஜய் மல்லையா கடனாகப் பெற ஐடிபிஐ வங்கி அதிகாரிகள் சிலரும் உதவியுள்ளனர். அவர்களில் ஐந்து பேரின் பெயரை தனது விசாரணை அறிக்கையில் சிபிஐ குறிப்பிட்டுள்ளது. அவர்களின் பெயர் விபரமாவது, ஐடிபிஐ வங்கியின் சேர்மன் மற்றும் மானேஜிங் டைரக்டரான யோகேஷ் அகர்வால் மற்றும் கிரெடிட் கமிட்டியைச் சேர்ந்த பி.கே.பத்ரா, பந்தேலு, பன்சால், ஸ்ரீனிவாசன் ஆகியோர் ஆவர்.

வேறு வங்கிக் கணக்குகள் மூலம்...
இதற்கிடையே, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தை விற்பனை செய்தது தொடர்பாக, டியாஜியோ நிறுவனம் வேறு சில வங்கிக் கணக்குகள் மூலமாகவும் விஜய் மல்லையாவிற்கு பணம் கொடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்மன்...
இது தொடர்பாக கிங் பிஷர் நிறுவன நிதிப்பிரிவு தலைவர் ரகுநாதன் மற்றும் சிபிஐ-யின் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஐடிபிஐ வங்கி ஊழியர்கள் ஐந்து பேருக்கும் அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பியுள்ளது. ஏற்கனவே இந்த வழக்குத் தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையும் தனியாக வழக்கு ஒன்றைப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications