ஆதர்ஷ் வழக்கு: அசோக் சவான் பெயரை நீக்க கோர்ட் மறுப்பு
மும்பை: ஆதர்ஷ் குடியிருப்புகளை ஒதுக்கியதில் நடந்த முறைகேடுகள் குறித்த வழக்கில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான் பெயரை நீக்கக் கோரிய சிபிஐ மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல் தொடர்பாக, மகாராஷ்டிர அரசால் நியமிக்கப்பட்ட விசாரணை கமிஷன் அறிக்கை மற்றும் அதன் மீது அரசின் நடவடிக்கை அறிக்கை ஆகியவை அம்மாநில சட்டமன்றத்தில் கடந்த டிசம்பர் இறுதியில் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த விசாரணையை மும்பை உயர் நீதிமன்றம் கண்காணித்து வருகிறது. மேலும் மாநில அரசு சார்பில் கடந்த 2011 ஜனவரியில் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜே.ஏ.பாட்டீல் தலைமையில் இருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.
இதனிடையே சிபிஐ குற்றப்பத்திரிகையில் முன்னாள் முதல்வர் அசோக் சவான் பெயர் இடம்பெற்றுள்ள நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் சங்கரநாராயணன் அனுமதி மறுத்தார். இதனையடுத்து சிபிஐ தரப்பில் இருந்து சவான் பெயரை குற்றப்பத்திரிகையில் இருந்து நீக்க அனுமதி கோரப்பட்டது.
இந்த மனுவை இன்று மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்ததோடு, சவான் மீது வழக்கு பதிவு செய்ய ஆளுநர் அனுமதி மறுத்திருந்தாலும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு விசாரணை நடத்த முடியும் என யோசனை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications