இரவு மருத்துவமனைக்கு போன கார்த்தி சிதம்பரம் காலையில்தான் வந்தார்.. நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்
டெல்லி: கார்த்தி சிதம்பரத்தை விசாரிக்க மேலும் 14 நாட்கள் காவல் தேவை என்றும், கார்த்தி சிதம்பரத்திடம் ஒரு நாளில் எந்த வாக்குமூலத்தையும் பெற முடியவில்லை என்றும் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம், டெல்லி பட்டியாலா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். 15 நாட்கள் காவல் அளிக்க சிபிஐ கோரியது. ஆனால் 1 நாள் காவல் வழங்கியது நீதிமன்றம்.

இன்று மீண்டும் கார்த்தி சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கு விசாரணையை கார்த்தி சிதம்பரம் தந்தையும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் நேரில் வந்து பார்வையாளர் மாடத்தில் இருந்தபடி பார்த்தார். முன்னதாக, கார்த்தி சிதம்பரத்தை தனிப்பட்ட முறையில் சந்தித்த அவர், தான் இருப்பதாகவும், அஞ்சாமல் வழக்கை சந்திக்கும்படியும் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதேபோல, கார்த்தி சிதம்பரத்தின் தாயார், நளினி சிதம்பரமும் கோர்ட்டில் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து நிகழ்வுகளை பார்வையிட்டார்.
நேற்று இரவு கார்த்தி சிதம்பரத்திற்கு மருத்துவ பரிசோதனை செய்ததாகவும், அப்போது அவர் உடல் நலம் பற்றி எந்த குறையும் சொல்லாத நிலையில், டாக்டர் ஷகில் அகமது அவரை, இதய நோய் சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைத்ததாகவும், இன்று காலை 7.50 மணிக்குதான் கார்த்தி சிதம்பரம் சிபிஐ அலுவலகம் அழைத்து வரப்பட்டதாகவும், காலை 10 மணிவரை அவர் தயாராகினார் என்றும் எனவே சிபிஐயால் கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடத்த முடியவில்லை என்றும், நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
எனவே கார்த்தி சிதம்பரத்தை மேலும் 14 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று வழக்கறிஞர் கோரிக்கைவிடுத்தார்.












Click it and Unblock the Notifications