கார்த்தி சிதம்பரம் ஏன் வெளிநாடு செல்லக்கூடாது? சிபிஐ பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் வழக்கில் சிபிஐ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எஸ். மீடியாவுக்கு நிதித்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியதில் முறைகேடாக பணம் பெற்றதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் மீது சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. இதுதொடர்பாக அவரது வீட்டில் சோதைனயும் நடத்தப்பட்டது.
இது குறித்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டது. அவர் விசாரணைக்கு ஆஜராகாததை தொடர்ந்து அவரை தேடப்படும் நபராக மத்திய அரசு அறிவித்து, லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டது. இதனால் அவர் வெளிநாடு செல்ல தடை ஏற்பட்டது.
ஆனால் கார்த்தி சிதம்பரமோ, தான், தனது மகளின் படிப்பு தொடர்பாகவும், பல்கலைக்கழகத்தில் உரையாற்றும் நோக்கத்திற்காகவும், இருமுறை இங்கிலாந்து செல்ல வேண்டியுள்ளதால் அதற்காவது அனுமதி தரும்படி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் வழக்கில் சிபிஐ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விஷயத்தில் பதிலளிக்க சிபிஐ கூடுதல் கால அவகாசம் கேட்டது. இருப்பினும், நவம்பர் 20ம் தேதிக்குள், 'கார்த்தி சிதம்பரம் லண்டன் செல்ல எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?' என்பது குறித்து பதிலளிக்க வேண்டும் என்று சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.