"ரூ.150 கோடிக்கு எல்.டி.டி.இ அணு குண்டு மூலப் பொருள் : பெங்களூருவில் 'சதுரங்க வேட்டை' கோஷ்டி கைது!
பெங்களூரு: அணு குண்டு தயாரிப்பதற்காக விடுதலை புலிகள் இயக்கம் வைத்திருந்த சிவப்பு பாதரசம் என்று பொய் சொல்லி சாதாரண கல்லை ரூ.150 கோடிக்கு விலைபேசிய பலே மோசடிக்காரர்கள் மூவரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவில் ஒரு கும்பல், சிவப்பு பாதரசம் என்ற பெயரில் ஒரு பொருளை விற்பனை செய்ய முயலுவதாக நகர குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மோசடி நபர்களை கையும், களவுமாக பிடிக்கும் நோக்கத்தில், மாறுவேடத்தில்,, வாடிக்கையாளரை போல அந்த மூன்று பேரையும் அணுகினர் போலீசார்.

அப்போது, அந்த நபர்கள் கூறிய தகவல் போலீசாருக்கு அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. இலங்கையில் விடுதலை புலிகள் இயக்கம், அணு குண்டை தயாரிக்க சோவியத் ரஷ்யாவிடமிருந்து குறிப்பிட்ட மூலப்பொருளை வாங்கியதாகவும், இயக்க தலைவர் பிரபாகரன் இறந்த பிறகு புலிகளில் ஒருவர் அதை இந்தியா கொண்டு வந்ததாகவும், அந்த மூலப்பொருள்தான் சிவப்பு பாதரசம் என்றும், அது தங்களிடமுள்ளதாகவும் அந்த நபர்கள் கூறியுள்ளனர்.
மூலப்பொருளை காண்பிக்குமாறு மஃப்டி போலீசார் கேட்டபோது, 5 லட்சம் ரூபாய் பணத்தை முன்பணமாக தந்தால் மட்டுமே மூலப்பொருளை காண்பிக்க முடியும் என்றும் போலீசார் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து வாடிக்கையாளர்களாக நடித்த போலீசார், ரூ.5 லட்சத்தை கொடுத்துள்ளனர்.

இதையடுத்து ஒரு சிலிண்டருக்குள் கல் போன காணப்பட்ட ஒரு பொருளை காண்பித்து, இதுதான் அந்த மூலப்பொருள் என்று மோசடி நபர்கள் கூறியதுடன், அது அணு ஆயுத தயாரிப்புக்குரிய மூலப்பொருள்தான் என்பதாக அமெரிக்க ஆய்வகம் ஒன்று அளித்த போலி சான்றிதழையும் மஃப்டி போலீசாரிடம் காட்டியுள்ளனர், அந்த ஆசாமிகள்.
இதைத் தொடர்ந்து கையும் களவுமாக மூவரையும் போலீசார் கைது செய்தனர். அணு ஆய்வு துறையிடம் கொடுத்து ஆய்வு செய்ததில் மோசடி நபர்கள் கூறியது போல அது அணு ஆயுத மூலப்பொருள் இல்லை, வீடு கட்ட பயன்படுத்தப்படும் ஹாலோபிளாக் வகை கல் என்பது தெரியவந்துள்ளது. விடுதலை புலிகள் பெயரை அணு ஆ.யுதத்தோடு தொடர்பு படுத்தி ரூ.150 கோடியை அபேஸ் செய்ய முயன்ற அந்த பலே நபர்கள் இப்போது போலீஸ் வசமுள்ளனர். அவர்களிடமிருந்து லேப்டாப் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications