வயது முதிர்ந்த தண்டனைக் கைதிகளை விடுதலை செய்ய முடிவு.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வயது முதிர்ந்த தண்டைனைக் கைதிகளை விடுதலை செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லி: மகாத்மா காந்தியின் 150 வது ஆண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, வயது முதிர்ந்த சிறைக் கைதிகளை விடுதலை செய்ய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நேற்று புதன்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நேற்று புதன்கிழமை கேபினட் அமைச்சர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தேசப் பிதா காந்தியடிகளின் 150 வது ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இந்தியா முழுவதும் சிறைகளில் தண்டனை அனுபவித்துவரும் வயது முதிர்ந்த தண்டனை கைதிகளை விடுதலை செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவு மூலம், தண்டனை பெற்று சிறையில் உள்ள 55 வயதுக்கு மேலான பெண்கள் மற்றும் மாற்று பாலினத்தவர் தங்கள் தண்டனை காலத்தில் 50 சதவிகிதத்தை கழித்துவிட்டிருந்தால் அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள்.
அதே போல, 60 வயதுக்கு மேலான தண்டனைக் கைதிகள் தங்கள் தண்டனை காலத்தில் 50 சதவிகிதத்தை கழித்திருந்தால் அவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள்.
அதே போல, 70 சதவிகிதம் உடல் இயலாமையும், நோயுற்ற கைதிகளும் தங்கள் தண்டனை காலத்தில் மூன்றில் இரண்டு பங்கு கழித்திருந்தால் அவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள்.
அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் கூறுகையில், சிறையில் தண்டனை அனுபவித்து வரும் வயது முதிர்ந்த கைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கைதிகளின் விடுதலை, கைதிகளின் விடுதலை மூன்று கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும். முதல் கட்டமாக இந்த ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி மகாத்மா காந்தியின் 149 பிறந்த நாளிலும், இரண்டாவது கட்டமாக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி சம்பரன் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்ற நாளிலும், மூன்றாவது கட்டமாக மகாத்மா காந்தியின் 150 வது ஆண்டு பிறந்த நாளிலும் கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள்.
வயது முதிர்ந்த கைதிகள் விடுதலை செய்வது என்பது, மரண தண்டனை கைதிகளுக்கும், மரண தண்டனை பெறப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக தண்டனை குறைப்புக்குள்ளான கைதிகளுக்கும் பொருந்தாது.
அதோடு, வரதட்சனைக் கொடுமை, கொலை, பாலியல் பலாத்காரம், ஆள் கடத்தல், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை ஆகிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள், பயங்கரவாத குற்றங்கள், சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள், கள்ள நோட்டு குற்றங்களில் ஈடுபட்டவர்கள், நீதி மோசடி செய்தவர்கள், அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டவர்கள், ஊழல் செய்தவர்கள், போதை மருந்து தடுப்பு சட்டத்தில் தண்டனை பெற்றவர்கள் உள்ளிட்ட தண்டனை கைதிகளுக்கு விடுதலை கிடையாது என்று கூறினார்.