புதுச்சேரியில் மே 1 முதல் பெட்ரோல், டீசல் விலை அன்றாடம் மாற்றம்!
சோதனை ஓட்டமாக புதுச்சேரியில் மே 1-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை அன்றாடம் மாற்றப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை தெரிவித்துள்ளது.
டெல்லி: சோதனை ஓட்டமாக புதுச்சேரியில் வரும் 1-ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை அன்றாடம் மாற்றப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை தெரிவித்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறை தான் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. தங்கத்திற்கு விலை நிர்ணயம் செய்வது போல பெட்ரோல், டீசலுக்கும் அன்றாடம் விலை நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்தன. அதன்படி, முதல் கட்டமாக புதுச்சேரி, விசாகப்பட்டிணம், உதய்பூர், ஜாம்ஷெட்பூர் மற்றும் சண்டீகர் ஆகிய நகரங்களில் சோதனை அடிப்படையில் இந்த திட்டம் வருகிறது.
அதன்படி வரும் 1-ம் தேதி முதல் இதை செயல்படுத்தி பார்க்க முடிவு செய்துள்ளனர். அதன் பிறகே நாடு முழுவதும் அமல்படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படவுள்ளது.
இந்நிலையில் வரும் 1-ஆம் தேதி முதல் புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறைவோ அல்லது கூடுவதோ தினந்தோறும் மாறுபடும்.